டி.எஸ்.பி விஷ்ணு பிரியா தற்கொலையும்… அட்டாக் பாண்டியின் அதிரடி கைதும்…
நாமக்கல்: தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா தற்கொலை விவகாரத்தால் எழுந்துள்ள சர்ச்சைகளை திசை திருப்பவே மும்பையில் தலைமறைவாக இருந்த அட்டாக் பாண்டியை இந்த நேரத்தில் கைது செய்ததாகக் காட்டி தமிழக போலீஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலித் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி விஷ்ணு பிரியா கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலையில் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விஷ்ணு பிரியா தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவருக்கு கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயரதிகாரிகளினால் அழுத்தம் அதிகமாக இருந்தது என்று கூறப்பட்டது.
விஷ்ணுபிரியா தற்கொலைக்கு முன்னதாக எழுதிய கடிதத்தின் சில பக்கங்களும் மறைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்கொலை விவகாரத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று விஷ்ணு பிரியாவின் பெற்றோரும், அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியும்,விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கு குறித்த விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டு இருந்த அறிக்கையில்,தமிழக காவல்துறை மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்று கூறியிருந்தார்.மேலும் அவர்,ராமஜெயம் கொலை வழக்கு,பொட்டு சுரேஷ் கொலை வழக்கு ஆகியவற்றில் குற்றவாளிகள் பல ஆண்டுகளாக போலீசாரால் கைது செய்யப்படவில்லை என்றும் இதற்கு காவல்துறையின் மெத்தன போக்கே என்றும் குற்றம் சாட்டியிருந்தார். கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்தநிலையில்தான் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் போலீசார் இரண்டரை ஆண்டு காலமாக தே.......டப்பட்டு வந்த அட்டாக் பாண்டியை கைது செய்தது தமிழக போலீஸ்.
கண்காணித்த போலீஸ்
பொட்டு சுரேஷ் கொலை வழக்கில், முதல்குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அட்டாக் பாண்டியை கடந்த இரண்டரை ஆண்டுகளாக போலீசார் சில மாதங்களுக்கு முன்பு வரை அட்டாக் பாண்டி கொல்கத்தாவில் இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து, அங்கு போலீசார் தேடிச்சென்றனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் அட்டாக் பாண்டி மும்பையில் இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனாலும் அவரை போலீஸ் நெருங்காமல் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
திமுகவிற்கு செக்
2016 சட்டசபை நேரத்தில் கைது செய்து தி.மு.கவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதுதான் ஆளும்கட்சியின் திட்டம்தான் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இப்போது அதிரடியாக அட்டாக் பாண்டி கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அட்டாக் பாண்டியின் நடமாட்டத்தை காவல்துறையினர் கடந்த பல காலமாகவே நோட்டம் விட்டு வந்துள்ளது உறுதியாகி உள்ளது.
அரசுக்கு நெருக்கடி
அரசுக்கு நெருக்கடி ஏற்படும் விதமாக பெரிய பிரச்சினை ஒன்று உருவானால் அதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் விதமான நடவடிக்கைகளை ஆள்பவர்கள் மேற்கொள்வது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் தற்போது டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா தற்கொலை விவகாரம் அரசுக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
திசை திருப்பும் நடவடிக்கை
விஷ்ணு பிரியா விவகாரம் காவல்துறையிலும், அதிகாரிகள் மத்தியில் ஆளும் அரசு மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் மக்கள் மத்தியிலும் அதிமுக அரசு மீது அதிருப்தி நிலவுகிறது. இந்நிலையில் அட்டாக் பாண்டி மும்பையில் கைது செய்யப்பட்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் கோகுல்ராஜ் கொலைக்குக் காரணமாகக் கூறப்படும் யுவராஜும் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.