உடல்நலக்குறைவு என நாடகம் போடுகிறார் ராம மோகன் ராவ்?
சென்னை: கடந்த 8ஆம் தேதி மணல் குவாரி அதிபர் சேகர் ரெட்டியின் வீடு, அலுவலகம் என 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் காட்டப்படாத ரூ.144 கோடி பணம், 177 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்பேரில், அவரது கூட்டாளிகள், நண்பர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த பி.ராமமோகன் ராவின் அண்ணா நகர் வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலக அறை, அவரது மகன் விவேக்குக்கு சொந்தமான திருவான்மியூர் வீடு, ஆந்திராவில் உள்ள அவரது மனைவி ஹர்சினியின் பெற்றோர் வீடு, உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் என மொத்தம் 14 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த புதன்கிழமை அதிகாலை தொடங்கி வியாழக்கிழமை அதிகாலை வரை 25 மணி நேரம் சோதனை நடத்தினர்.
ராம மோகன ராவ் வீட்டில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம், ரூ.30 லட்சம், அவரது மகன் விவேக் வீட்டில் இருந்து பணம், 10 கிலோ தங்கம், வைர நகைகள், பல கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ராமமோகன ராவ் விடுவிக்கப்பட்டார். சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், விசாரணையில் கிடைத்த தகவல்கள் அனைத்தையும் வருமான வரித்துறை அதிகாரிகள் அறிக்கையாக தயாரித்துள்ளனர்.
சேகர் ரெட்டி கைது
சேகர் ரெட்டி குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள்தான் முதலில் விசாரணை தொடங்கினர். அதன் பின்னர்தான், சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவினர் வழக்கு பதிவு செய்து சேகர் ரெட்டி மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்களை கைது செய்தனர்.
ராம மோகன் ராவ் கைதாக வாய்ப்பு
அதே போல ராம மோகன் ராவ், அவரது மகன் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியானது. விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பிய நிலையில் ராம மோகன் ராவின் பினாமி என்று கூறப்படும் அமலநாதன் நேற்று ஆஜராகி ஒரு மணி நேரம் விளக்கம் அளித்தார்.
ஆஜராக சம்மன்
ராம மோகன் ராவும் அவரது மகனும் வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி விவேக் ஆஜராகவில்லை. அதே நேரத்தில் ராம மோகன் ராவ், உடல் நலம் சரியில்லை என்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாடகம் போடும் ராம மோகன் ராவ்?
இது பழைய டெக்னிக்தான் என்றாலும் இது அப்பட்டமான நாடகம் என்று வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். ராம மோகன் ராவுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார் எனவும், அவர்கள் அனைவரும் விசாரணை வளையத்திற்குள் சிக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.