ஜெ. மரணத்தைக் கையில் எடுப்போம்.. சசி குடும்பத்துக்கு மறைமுக மிரட்டல் விடுக்கிறாரா தம்பித்துரை?
சென்னை: பேசாமல் ஒதுங்கிப் போய் விடுங்கள். இல்லாவிட்டால் ஜெயலலிதா மரண விவகாரத்தை கையில் எடுத்து அலைக்கழிப்போம் என்று தம்பித்துரை மறைமுக மிரட்டல் விடுத்துள்ளதாக கருதப்படுகிறது.
தேவைப்பட்டால் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்போம் என்று தம்பித்துரை கூறியுள்ளதற்கு இதுதான் உண்மையான அர்த்தம் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
சசிகலா குடும்பத்துக்கு தம்பித்துரை மூலமாக விடுக்கப்படும் மறைமுக மிரட்டலாகவும் இது கருதப்படுகிறது. சசி குடும்பத்தை அதிமுகவை விட்டு விரட்டியடிக்க இந்த அஸ்திரத்தைத்தான் கடைசியாக சிலர் பயன்படுத்த திட்டம் வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதைத்தான் தம்பித்துரை வாய் மூலமாக தெரிவித்துள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.

சசிகலா - தினகரன்
அதிமுகவை ஆக்கிரமித்த சசிகலாவுக்கு துரதிர்ஷ்டவசமாக சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டதால் அவரது ஆசை நிராசையானது. சிறைக்குப் போனாலும் கூட அவர் தினகரனை தனது இடத்தில் விட்டுச் சென்றிருந்தார். இதனால் தினகரன் கைக்குக அதிமுக போனது.

அடுத்தடுத்து ரெய்டுகள் - வழக்குகள்
இந்த நிலையில்தான் திடீரென வருமான வரித்துறை அதிரடி ரெய்டுகளை நடத்தத் தொடங்கியது. ஒரே சமயத்தில் நடந்த இந்த திடீர் ரெய்டுகளால் தினகரன் தரப்பு அதிர்ந்தது. வழக்குகளும் பாயத் தொடங்கின. விட்டால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடமும் ரெய்டு நடக்கக் கூடும் என்ற தகவல்களும் வெளியாகின. மறுபக்கம் தினகரனை நேரடியாகவே குற்றம் சாட்டி டெல்லியில் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக ஒரு வழக்கு பாய்ந்தது.

நீங்க பேசாம போயிருங்க சிவாஜி!
இதனால் அதிர்ச்சி அடைந்த எடப்பாடி தரப்பு, எங்கே நம் பதவியெல்லாம் பறி போய் விடுமோ என்ற அச்சத்திற்கு உள்ளானார்கள். இருக்கிற காலம் வரை பதவியையும், பணத்தையும் காப்பாற்ற தினகரன் - சசிகலா குடும்பத்தை விரட்டுவதுதான் ஒரே வழி என்று அவர்களுக்கு எங்கிருந்தோ அறிவுரையும் வந்து சேர்ந்தது. இதையடுத்து அவர்களை ஒதுக்கி வைப்பதாக கிராமத்து பஞ்சாயத்து தீர்ப்பு போன்ற அறிவிப்பை ஜெயக்குமார் மூலம் வெளியிட்டனர்.

இன்னும் போகாத தினகரன்
நெருக்கடி அதிகரித்த காரணத்தால் தான் ஒதுங்கிக் கொள்வதாக கூறியுள்ளார் தினகரன். அதேசமயம், என்னை துணைப் பொதுச் செயலாளராக நியமித்தவர் பொதுச் செயலாளர் சசிகலாதான். அவரே என்னை நீக்கட்டும் என்று கூறி விட்டு ராஜினாமா செய்யாமல் உள்ளார். எனவே அவர் அதிமுகவை விட்டு இன்னும் போகவில்லை என்பதே எதார்த்தம். இந்த நிலையில்தான் நேற்று தம்பித்துரை ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

ஜெ. மரணம் குறித்து விசாரிப்போம்
சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சசிகலா பொதுச் செயலாளராக தொடர்வது குறித்து இரு குழுக்களும் சேர்ந்து தான் முடிவு செய்யும். குழு முடிவு எடுத்தால் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மறைமுக மிரட்டலா?
இதை மறைமுக மிரட்டலாக சிலர் பார்க்கிறார்கள். கட்சிப் பதவியை தினகரன் இன்னும் ராஜினாமா செய்யாமல் இருப்பதால், அதிலிருந்தும் அவர் போக வேண்டும். இல்லாவிட்டால் தேவையில்லாமல் ஜெயலலிதா மரண விவகாரத்தை கையில் எடுத்து கேஸ் போட்டு அலைய விடுவோம் என்று மறைமுகமாக தினகரனை மிரட்டப் பார்ப்பதாக கருதப்படுகிறது.
அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. மறுப்பதற்கில்லை.












Click it and Unblock the Notifications