ரஜினி, கமல் அரசியலுக்கு வர இது சரியான நேரமா... தினகரன் வெற்றி சொல்வது என்ன?
டிடிவி. தினகரன் வெற்றிக்குப் பின்னர் அரசியலுக்கு வர திட்டமிட்டிருக்கும் நடிகர் ரஜினி, கமல் தங்களின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது.
சென்னை : ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக பலமிழந்துவிட்டது என்றும் தலைமையில் இல்லாமல் திண்டாடும் தமிழகத்திற்கு தலைமை ஏற்க ரஜினி, கமல் அரசியலுக்கு வர வேண்டும் என்ற குரல்கள் பலமாக ஒலித்தன. ஆனால் இந்த கோரிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் டிடிவி. தினகரன். தான் ஒரு தலைவனாக உருவாகி வருவதைத் தான் அவர் தன்னுடைய வெற்றியின் மூலம் தமிழக மக்களுக்கு உணர்த்துகிறாரா?
தமிழகம் தலைமை இல்லாமல் திண்டாடுகிறது நடிகர் ரஜினியும், கமலும் அரசியலுக்கு வரவேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவை வழிநடத்த சரியான தலைமை இல்லை, ஆட்சியை வழிநடத்த அதிகாரம் படைத்த தலைமை இல்லை என்றெல்லாம் குற்றம்சாட்டப்பட்டது.

மத்திய அரசுக்கு துணை போன ஆட்சி
இதற்கு ஏற்றாற்போல ஓராண்டில் அதிமுக இரண்டாக மூன்றாக உடைந்து, பின்னர் இணைந்தது. ஆட்சியில் ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களை ஆதரித்து மத்திய அரசுடன் இணக்கமாக சென்றது. ஜெயலலிதா எதிர்த்த உதய் மின் திட்டத்தை ஆதரித்தது, நீட் தேர்வுக்கு வலுவான எதிர்ப்பு தெரிவிக்காதது என மத்திய அரசின் திட்டங்களில் மாநில சுயாட்சியை விட்டுக் கொடுத்து சென்றதால் மக்களுக்கு இப்படியொரு எண்ணம் தோன்றியது.

கமல் விரைவில்
இதனிடையே தமிழகத்திற்கு தலைமை ஏற்க ரஜினி, கமல் அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் குரல் எழுப்பினர். ஒரு வழியாக கமல் தான் அரசியலுக்கு வந்துவிட்டதாகவும் விரைவில் கட்சி தொடங்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

ரஜினி அறிவிப்பை வெளியிடுவாரா?
நடிகர் ரஜினி நாளை முதல் ரசிகர்களை சென்னையில் வைத்து சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு நடக்கும் காலத்தில் டிசம்பர் 31 அல்லது ஜனவரி 1ம் தேதி ரஜினி தன்னுடைய அரசியல் வருகை குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என்றும் சொல்லப்படுகிறது.

உருவாகும் தலைவன்
தினகரன் ஆர்கே நகரில் பெற்ற வெற்றியானது தமிழகத்தில் திராவிட கட்சிகளின் அரசியல் தான் இனி வரும் காலகட்டங்களிலும் மேலோங்கி இருக்கும் என்பதையே காட்டுகிறது. தினகரன் எப்படி வெற்றி பெற்றார் என்பதைக் காட்டிலும் தான் ஒரு தலைவனாக உருவாகி வருவதைத் தான் தினகரனின் வெற்றி பிரதிபலிப்பதாக பலரும் பார்க்கின்றனர்.

விஜயகாந்தால் ஜொலிக்க முடியவில்லை
நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது எம்ஜிஆர் காலத்தில் வேண்டுமானால் சாத்தியமாகி இருக்கலாம். ஆனால் 2009ல் அரசியல் கட்சி தொடங்கிய விஜயகாந்தால் மக்கள் பிரச்னையில் அந்த அளவிற்கு முழு ஈடுபாட்டுடன் செயல்படமுடியவில்லை என்பது தான் உண்மை. நடிப்பு, அரசியல் என்று இரட்டை குதிரையில் சவாரி செய்வது என்பது இரண்டிற்குமே ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

தினகரன் தலைமையில் புதிய அணி
எனவே நடிகர் ரஜினி, கமல் தங்களுக்கு இருக்கும் புகழை வைத்து அரசியலுக்கு வந்தாலும், முழுநேர அரசியலில் ஈடுபடுவது இவர்களுக்கு சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மற்றொருபுறம் தினகரன் தலைமையில் புதிய அணி உருவாகி வரும் நிலையில் இவர்களின் அரசியல் வரவு எடுபடுமா என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டியுள்ளது.












Click it and Unblock the Notifications