அதிக கனம் கொண்ட ராக்கெட்டை தயாரித்துள்ள இஸ்ரோ: நெல்லை விஞ்ஞானி
நெல்லை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அடுத்த சாதனையாக அதிக எடை கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 என்ற கன ரக ராக்கெட்டை தயாரித்துள்ளது என விஞ்ஞானி நெல்லை முத்து தெரிவித்தார்.
இது குறித்து இந்திய அறிவியல் ஆய்வு நிறுவன விஞ்ஞானி நெல்லை முத்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஆரம்பத்தில் 2 டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் ராக்கெட்டை தயாரித்து விண்ணில் ஏவி வந்தது. 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் செயற்கைக்கோள் பறப்பதற்கு உதவும் இந்த ராக்கெட்டின் எடை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது 4 முதல் 6 டன் எடை உள்ள செயற்கைக்கோளை சுமந்து செல்லும் கனரக ராக்கெட்டுகளை நம்மால் தயாரிக்க முடியும்.
இதை நிரூபிக்கும் வகையில் தற்போது ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 என்ற புதிய கன ரக ராக்கெட்டை தயாரித்து வருகிறது. இதற்கான திட எரிபொருள் பரிசோதனை முடிந்துள்ளது. பறக்கும் நிலையிலான சோதனை தற்போது நடந்து வருகிறது. விண்வெளி ஆராய்ச்சி கல்விக்கு இன்றைய இளைய தலைமுறையினரிடம் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதை ஊக்குவிக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக திருவனந்தபுரத்தில் ஐஐஎஸ்டி என்ற விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப கல்வி கற்று தரப்படுகிறது.
பிளஸ் டூவில் அறிவியல் பாடப் பிரிவை எடுத்து படித்து முடித்து விண்வெளி கல்வியில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு ஐஐடி போல் ஐஐஎஸ்டி என்னும் நுழைவு தேர்வு, எழுத்து தேர்வு ஆகியவை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் 80 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான கல்வி கற்றுதரப்படுகிறது. இதற்கான பாடத்திட்டங்களை விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. இந்த பயிற்சியில் நன்றாக படித்து வெற்றி பெருபவர்களுக்கு இங்கேயே ஆராய்ச்சி தொடர்பாக வேலை வாய்ப்பு அளித்து ஊக்குவிக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications