ராமமோகன் ராவிடம் ஐடி அதிகாரிகள் விசாரணை- எந்த நேரத்திலும் மகனுடன் கைது?
முன்னாள் தலைமை செயலர் ராமமோகன் ராவிடம் ஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை முடிவில் ராமமோகன்ராவ் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் ஊழல் புகார்களில் சிக்கியுள்ள தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர் ராமமோகன் ராவ், அவரது மகன் விவேக், விவேக்கின் வக்கீல் அமலநாதன் ஆகியோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் முடிவில் மூவரும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
தமிழக அரசின் தலைமை செயலராக இருந்தவர் ராமமோகன் ராவ். கான்டிராக்டர் சேகர் ரெட்டிக்கு ரூ10,000 கோடி மதிப்பிலான தமிழக அரசின் ஒப்பந்தங்களை அள்ளிக் கொடுத்தவர்.
சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ131 கோடி ரொக்கம் மற்றும் 171 கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். சேகர் ரெட்டி கொடுத்த தகவல்களின் அடிப்படையில் ராமமோகன் ராவ், அவரது மகன் விவேக் உள்ளிட்டோர் வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து ராமமோகன் ராவ் தலைமை செயலர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது ராமமோகன் ராவ், அவரது மகன் விவேக், விவேக்கின் வழக்கறிஞர் அமலநாதன் ஆகியோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையின் முடிவில் மூவரும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.