இத்தனை ரெய்டுகள் நடந்தும் வருமான வரித்துறை அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லாதது ஏன்?
தமிழகத்தை அதிர வைக்கும் வருமான வரிசோதனைகள் நடைபெறுகின்றன. ஆனாலும் இந்த சோதனை தொடர்பான விவரங்கள் ஏன் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்பது பொதுமக்களின் கேள்வி.
சென்னை: தமிழகத்தில் அதிரடியாக ரெய்டுகள் நடத்தி பரபரப்பை ஏற்படுத்துகிறது வருமான வரித்துறை. ஆனால் அண்மைக்காலமாக எந்த ரெய்டு குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் மவுனமாகவே வருமான வரித்துறை அதிகாரிகள் நடந்து கொள்வதின் மர்மம்தான் என்ன? என்பது பொதுமக்களின் கேள்வி.
சட்டசபை தேர்தலின் போது திருப்பூர் அருகே கண்டெய்னர்களில் ரூ570 கோடி பிடிபட்டது; மேலும் கரூர் அன்புநாதன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. வருமான வரித்துறையினரின் இந்த சோதனைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சோதனை தொடர்பாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் விசாரணைக்கு வர வழைக்கப்பட்டனர். இது தொடர்பாக எந்த ஒரு தகவலையும் வருமான வரித்துறை தெரிவிக்கவில்லை.

ஈரோடு
இதையடுத்து ஈரோட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. தமிழக அமைச்சர் ஒருவரின் உறவினர் வீட்டில்தான் இந்த சோதனை எனக் கூறப்பட்ட நிலையில் இது தொடர்பாகவோ அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக எதுவும் வெளியாகவில்லை.

சேலம்
சேலத்திலும் அமைச்சரின் உறவினர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. அது குறித்தும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இவற்றை எல்லாம் விட தமிழக அரசின் தலைமைச் செயலராக இருந்த ராமமோகன் ராவ் வீட்டிலும் தமிழக அரசின் தலைமை செயலகத்திலும் கூட அண்மையில் சோதனை நடத்தப்பட்டது.

ராமமோகன் ராவ்
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் 2 அறைகளில் சோதனை நடத்தப்பட்டது. இப்போது இந்த சோதனை குறித்து ராமமோகன் ராவ் பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் தம்முடைய வீட்டில் இருந்தது ரூ1,12,320 மட்டுமே; 45 சவரன் நகைகள்தான் எனவும் வருமான வரித்துறையின் பட்டியலை பகிரங்கப்படுத்தி இருக்கிறார் ராமமோகன்ராவ்.

பகிரங்கப்படுத்த வேண்டும்
ராமமோகன் ராவ் வெளிப்படையாக இப்படி பேசியுள்ள நிலையில் உண்மையில் ராமமோகன் ராவை குறி வைத்தது ஏன்? அவருக்கும் கான்டிராக்டர் சேகர் ரெட்டிக்கும் என்ன தொடர்பு? ராமமோகன் ராவ் மகன் விவேக்கின் நிறுவனங்களுக்கும் தமிழக அரசுக்கும் என்ன தொடர்பு? என்பதெல்லாம் குறித்து தமிழக மக்கள் அறிந்து கொள்ள விரும்புகின்றனர். இதை மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டியதும் வருமான வரித்துறையின் கடமை. இல்லையெனில் மக்களின் வரவேற்புக்குள்ளாகும் வருமான வரித்துறையின் சோதனைகள் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும்.












Click it and Unblock the Notifications