விஜய் அண்ணா வீட்டில் ஐ.டி. ரெய்டா?: ரசிகர்கள் அதிர்ச்சி
சென்னை: இளையதளபதி விஜய்யின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வரும் செய்தி அறிந்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாஸன் உள்ளிட்டோர் நடித்துள்ள புலி படம் நாளை பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது. புலி படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ஆவலாக உள்ளனர் விஜய் ரசிகர்கள். கடந்த சில நாட்களாகவே அவர்கள் புலி படம் பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்து அதை டிரெண்டாக்கவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று புலிபுயல்(pulistorm) என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாகவிட்டுள்ளனர். இந்த சூழலில் ரசிகர்கள் மனதில் புயலை கிளப்பும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விஜய்யின் வீடு மற்றும் புலி படக்குழுவினரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள் என்பதை அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
நாளை படம் ரிலீஸாக உள்ள நிலையில் இப்படி சோதனை நடக்கிறதே என்று அவர்கள் கவலை அடைந்துள்ளனர். புலி படம் கணக்கில் காட்டப்படாத பணத்தில் எடுக்கப்பட்டதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் சென்றுள்ளது. இதையடுத்து தான் அவர்கள் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள்.
விஜய்யின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பற்றி கோடம்பாக்கத்திலும் பரபரப்பாக பேசிக் கொள்ளப்படுகிறது.