ஜெ. மரண சர்ச்சையில் சிக்கிய டாக்டர் சிவகுமாரின் திருச்சி வீடும் தப்பவில்லை!
ஜெயலலிதாவின் மர்ம மரண சர்ச்சையில் சிக்கிய டாக்டர் சிவகுமாருக்கு சொந்தமான திருச்சி வீட்டில் ரெய்டு நடைபெறுகிறது.
திருச்சி: ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவரும் மருந்துகளை மாற்றி கொடுத்தார் என்கிற சர்ச்சையில் சிக்கியவருமான டாக்டர் சிவகுமாருக்கு சொந்தமான திருச்சியில் உள்ள அவரது வீட்டில் வருமான வரி துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். இதில் போயஸ் கார்டன், கொடநாடு எஸ்டேட் என எதுவும் தப்பவில்லை.
இந்நிலையில் சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் வீடு, தம்பி மகன் மறைந்த மகாதேவனின் வீடு, கணவர் நடராஜனின் வீடு, திவாகரனின் வீடு என பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருச்சியில் டாக்டர் சிவகுமார் வீட்டில் ஐ.டி. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். டாக்டர் சிவகுமார் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவர் ஆவார்.
ஜெயலலிதாவுக்கு மருந்துகளை மாற்றி கொடுத்தவர்; ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரிக்கப்பட வேண்டியவர் என டாக்டர் சிவகுமார் சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.