விஸ்வரூபமெடுக்கும் 'சேகர் ரெட்டி' விவகாரம்... முதல்வர் ஓபிஎஸ் பிஏ ரமேஷ் வீட்டிலும் ஐடி ரெய்டு?
முதல்வர் பன்னீர்செல்வத்தின் உதவியாளர் ரமேஷ் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாக கூறப்படுகிறது.
சென்னை: போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி விவகாரத்தில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் உதவியாளர் ரமேஷ் என்பவரது வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
போயஸ் கார்டனுக்கு நெருக்கமான கான்டிராக்டர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ170 கோடி ரொக்கம், 130 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இச்சோதனையில் 5 மூத்த அமைச்சர்களுக்கும் தொடர்பு இருப்பது அம்பலமானது.

அத்துடன் சேகர் ரெட்டியை உருவாக்கியதில் தலைமை செயலர் ராமமோகன் ராவுக்கு முக்கிய தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களும் சிக்கின. இதையடுத்து ராமமோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை அண்ணாநகரில் உள்ள ராம மோகன் ராவ் வீடு, அவரது மகன் வீடு உட்பட 10 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் உதவியாளர்களில் ஒருவரான ரமேஷ் என்பவரது வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications