திமுகவின் புதிய மா.செ.க்கள்... சென்னை மேற்கு - ஜெ. அன்பழகன்; சென்னை தெற்கு- தனசேகரன்?
சென்னை: திமுகவில் 65 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள புதிய மாவட்ட செயலாளர் யாராக இருக்கும் என்ற விவாதம் களைகட்டி வருகிறது. மேற்கு சென்னை மாவட்ட செயலராக ஜெ. அன்பழகன் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திமுகவை சீரமைக்க 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைப்படி திமுக மொத்தம் 65 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
வட சென்னை, தென் சென்னை என்று இருந்த சென்னை மாவட்டம் தற்போது 4 மாவட்டங்களாக்கப்பட்டுள்ளன.
சேகர்பாபு
சென்னை வடக்கு மாவட்டத்தில் திருவொற்றியூர், மாதவரம், பெரம்பூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், ராயபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகள் இடம்பெறுகின்றன. வடசென்னையில் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த சேகர்பாபு, முக்கியப் பதவி ஏதும் இல்லாத நிலையில் அமைதியாக இருக்கிறார். அதனால் அவருக்கு சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
சேப்பாக்கம் சுரேஷ்
சென்னை கிழக்கு மாவட்டத்தில் துறைமுகம், எழும்பூர், கொளத்தூர், திரு.வி.க. நகர், வில்லிவாக்கம், அம்பத்தூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் வருகின்றன. இதில் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய சேப்பாக்கம் சுரேஷ், கிழக்கு மாவட்ட செயலராக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெ. அன்பழகன்
சென்னை மேற்கு மாவட்டத்தில் மதுரவாயல், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, அண்ணாநகர், ஆயிரம் விளக்கு, மயிலாப்பூர், தியாகராய நகர், தொகுதிகள் வருகின்றன. தற்போது தென்சென்னை மாவட்ட செயலாளராக இருக்கும் ஜெ. அன்பழகன் மேற்கு மாவட்ட செயலாளராகக் கூடும்.
மா.சுப்பிரமணியன் இல்லை, தனசேகரனே
சென்னை தெற்கில் சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், ஆலந்தூர், வேளச்சேரி தொகுதிகள் வருகின்றன. இந்த மாவட்டத்துக்கு விருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் க.தனசேகரன் தலைவராக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியனுக்கு இந்தப் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால், சுப்பிரமணியனுக்கு மாநிலப் பதவி தரப்படலாம் என்று தனசேகரனே மாவட்டச் செயலாளர் ஆகலாம் என்றும் லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன