பாக். தீவிரவாதிகளுக்கு சென்னையில் வீடு தேடி வந்தேன்... ஜாகீர் உசேன் பரபரப்பு வாக்குமூலம்
சென்னை: இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளியான ஜாகீர் உசேன் கியூ பிரிவு போலீஸாரிடம் பல பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தனக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புடன் மிக நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், அதன் மூலம் பல தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்ததாகவும், தீவிரவாதிகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சென்னையில் நாச வேலைகளைச் செய்வதற்காக அவர்கள் தங்குவதற்கு தான் வீடு தேடி வந்ததாகவும் உசேன் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள்...
பாகிஸ்தானில் தீவிரவாதப் பயிற்சி
ஜாகீர் உசேன் பாகிஸ்தானில் தீவிரவாதப் பயிற்சி பெற்றுள்ளார். பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்காக உளவு பார்ப்பதை செய்து வந்துள்ளார். தீவிரவாத அமைப்புகளுடனும் இவருக்குத் தொடர்பு உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர்நீதின்றம், தூர்தர்ஷன் ஒளிபரப்பு கோபுரம், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அமெரிக்க துணை தூதரகம் ஆகியவற்றை தகர்க்க திட்டமிட்டிருந்ததாக கூறியுள்ளார்.
போட்டோ எடுக்க சென்னை பயணம்
பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ அமைப்பின் உத்தரவின்பேரில், இந்த இடங்களின் புகைப்படங்களை எடுத்து அனுப்பியதாகவும், அவை தெளிவாக இல்லாததால் மீண்டும் படம் பிடிக்க சென்னை வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பாக். தீவிரவாதிகள் தங்க வீடு
இதுதவிர, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை சென்னைக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், இதற்காக வாடகைக்கு வீடு தேடி வந்ததாகவும் ஜாகிர் உசேன் கூறியுள்ளார்.
6 முறை சென்னை பயணம்
தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக இதுவரை 6 முறை தமிழகம் வந்துள்ளதாகவும், இறுதியாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னை வந்ததாகவும் கூறியுள்ளார்.
விடிய விடிய விசாரணை
ஜாகீர் உசேனை 3 நாட்கள் காவலில் எடுத்து கியூ பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் கியூ பிரிவு காவல்துறையினர் அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தி வருகின்றனர்.நாளையுடன் அவருக்கு அளிக்கப்பட்ட 3 நாள் போலீஸ் காவல் முடிகிறது. அதன் பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தும் போலீஸார் மீண்டும் காவல் நீட்டிப்பு கோரவுள்ளனர்.