ஜல்லிக்கட்டு காளை முதல் சண்டை சேவல் வரை! அக்காவுக்கு சீராக கொடுத்த தம்பி! மானாமதுரையில் மாஸ் சம்பவம்
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சகோதரிக்கு ஜல்லிக்கட்டு காளை, ஆடு, கோழியை சீதனமாக சகோதரரும் அவருடைய நண்பர்களும் கொடுத்துள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.
மானாமதுரையை அடுத்த கீழமேல்குடியை சேர்ந்தவர் சந்தியா. இவரது வீட்டில் ஜல்லிக்கட்டு காளை, சேவல், சண்டை கிடா, நாட்டு நாய்கள், உள்ளிட்டவைகளை வளர்த்து வருகிறார்கள்.

இந்த ஜீவராசிகளுடன் சந்தியா மிகவும் பாசத்துடன் இருப்பாராம். பொதுவாக திருமணம் செய்து கொண்டு செல்லும் பெண்கள் தங்கள் பெற்றோரை பிரிந்து இருப்பதையும் உடன் பிறந்தவர்களை பிரிந்து இருப்பதையும்தான் தாங்க முடியாமல் அழுவார்கள்.
ஆனால் சந்தியாவுக்கு கால்நடைகளை விட்டு பிரிவது மிகவும் சங்கடமாக இருந்ததாம். இதை அவரது வீட்டாரும் உணர்ந்தனராம். இந்த நிலையில் சந்தியாவுக்கு பெரியகண்ணனுரை சேர்ந்த அரவிந்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர் ஒரு பொறியாளர்.
திருமண நாள் வந்ததும் சந்தியாவின் முகத்தில் கால்நடைகளை விட்டு எப்படி பிரிவது என்ற சோகம் இருந்தது. இதை புரிந்து கொண்ட அவருடைய தம்பி திடீரென திருமண மேடைக்கு ஜல்லிக்கட்டு காளை, சண்டை கிடா, சேவல், கோழிகளை சீதனமாக கொடுத்தார். இதனால் சந்தியா ஆச்சரியத்திலும் ஆனந்த கண்ணீரிலும் மூழ்கினார்.
அவர் ஆசைப்பட்டது போல் நாட்டு நாய்களையும் கொடுத்தார். இதற்கான ஏற்பாடுகளை சந்தியாவின் சகோதரர் தனது நண்பர்களுடன் சேர்ந்து செய்திருந்தார். என்ஜினியரிங் படித்திருந்த புது மாப்பிள்ளையும் சேவலை கையில் பிடித்தபடியே போட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தார்.
பொதுவாக புதுமண தம்பதிகளுக்கு நகைகள், தட்டுமுட்டு சாமான்களையே சீதனமாக வழங்குவர். ஆனால் இந்த திருமணத்திலோ பெண்ணுக்கு கால்நடைகளை சீதனமாக கொடுத்த சம்பவத்தை பற்றி எல்லோரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். அந்த காலத்தில் எல்லாம் இப்படித்தான் பசு மாடு, காளை, ஆடு, கோழி உள்ளிட்டவைகளை பெண் வீட்டாருக்கு சீதனமாக வழங்குவார்கள்.
அதை வைத்துக் கொண்டு அந்த பெண்கள் புகுந்த வீட்டை பொருளாதார ரீதியில் உயர்த்துவார்கள். இந்த மரபு இப்போதும் தொடர்வது பலருக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது. பொன், பொருளை காட்டிலும் இந்த கால்நடைகளை நமக்கு லாபகரமானவையே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.












Click it and Unblock the Notifications