ஜல்லிக்கட்டு கலவர விசாரணை… இன்னும் 6 மாதம் கால அவகாசம் தேவை.. கமிஷன் தலைவர் ராஜேஷ்வரன்
ஜல்லிக்கட்டு கலவர விசாரணை நடத்தி முடிக்க இன்னும் 6 மாதங்கள் தேவைப்படும் என்று விசாரணைக் கமிஷனின் தலைவர் ராஜேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து விசாரணை நடத்தி முடிக்க 6 அல்லது 7 மாதம் ஆகும் என்று நீதிபதி ராஜேஷ்வரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மொத்தம் 1949 பேர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் அனைவரையும் நாள் ஒன்றுக்கு 5 பேர் என்ற அளவில் அழைத்து விசாரணை நடத்துகிறோம்.
மதுரையில் மட்டும் 996 பேரும், கோவையில் 51 பேரும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தி முடிக்க இன்னும் 6ல் இருந்து 7 மாதங்கள் வரை பிடிக்கும். அடுத்தடுத்து, மதுரை, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று விசாரிக்க உள்ளோம்.
அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை இந்த விசாரணை கமிஷனுக்கு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் 6 மாதங்கள் கால அவகாசம் தேவைப்படுகிறது என்று ராஜேஷ்வரன் கூறியுள்ளார்.