மதுரை ஆனையூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு- காவல்துறை கெடுபிடியால் பதற்றம்
மதுரை ஆனையூரில் தடையை மீறி காளையை அடக்கிய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இதனைக் கண்டித்து சக இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
மதுரை: மதுரை அருகே ஆனையூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பங்கேற்று காளையை அடக்கிய இளைஞர்களை போலீசார் கைது செய்ததால் பதற்றம் நிலவியது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் ஆனையூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியின் போது சீறிப்பாய்ந்த காளையை இளைஞர்கள் அடக்கிப்பிடித்து மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து காளையை அடக்கிய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த சக இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் போலீசாரைக் கண்டித்து தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
அப்போது ஜல்லிக்கட்டை படம் பிடிக்க சென்ற டிவி செய்தியாளர்களிடமும் போலீசார் படம் பிடிக்க கூடாது என கூறி கெடுபிடியுடன் நடந்து கொண்டனர். மேலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் திரண்டுள்ளவர்களையும் போலீசார் வெளியேறுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications