ஜல்லிக்கட்டு... உச்சநீதிமன்றத்தை கைகாட்டி விட்டு தமிழகத்திற்கு கைவிரித்தது மத்திய அரசு! #jallikattu
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை பொறுத்தே அடுத்த நடவடிக்கை என்கிறார் மத்திய அமைச்சர் அனில் தவே.
டெல்லி: ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பொறுத்தே மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் அனில் மாதவ் தவே கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது தமிழகத்தை கொந்தளிக்க வைத்துள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டு பொங்கலின் போது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த ஏதுவாக மத்திய அரசு அவசர சட்டத்தைப் பிறப்பிக்க வேண்டும் என்பது தமிழகத்தின் கோரிக்கை.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சென்னையில் தொடங்கிய இந்த பேரெழுச்சி மதுரை, நெல்லை, கோவை என நீண்டு கொண்டிருக்கிறது.
மாணவர்கள் வீதிகளில் இறங்கி தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஓரிரு நாட்களில் வந்துவிடும். அந்த தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.
தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. எந்த போராட்டமாக இருந்தாலும் வன்முறையற்ற வகையில் நடந்தால் அதை வரவேற்போம்.
உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு என்ன என்பது தொடர்பாக முழுமையாக மத்திய அரசு விவரித்துள்ளது. அந்த தீர்ப்புக்காக காத்திருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications