அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்.. அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு!
ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் நேற்று ஆய்வு செய்தார். இன்று மாலை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மதுரை செல்கிறார்.
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த வசதியாக இயற்றப்பட்ட அவசர சட்டத்திற்கு ஆளுநர் இன்று ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து நாளை காலை 10 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு தேவையான அம்சங்களை கொண்ட சட்ட முன் வரைவை தமிழக அரசு உருவாக்கி, முதலில் அந்த அவசர சட்ட முன் வடிவு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கொடுத்தது. அதை பரிசீலித்த ராஜ்நாத்சிங் கையொப்பமிட்டு ஒப்புதல் வழங்கினார்.
இதையடுத்து அந்த சட்ட முன் வடிவு சட்ட அமைச்சகத்துக்கும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த 2 அமைச்சகங்களும் தமிழக அரசின் சட்ட முன் வடிவை அப்படியே ஏற்றுக்கொண்டு அளித்தன. மத்திய அரசின் மூத்த வக்கீல் அட்டர்னி ஜெனரல் முகுல்ரோத்கியும் தனது பரிந்துரைகளை தெரிவித்தார்.
ஆளுநர் வருகை
மத்திய அமைச்சரவைகளின் ஒப்புதலைத் தொடர்ந்து அந்த அவசரச் சட்ட முன் வடிவு ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
மேலும் நேற்றிரவே அந்த அவசரச் சட்டத்துக்கான கோப்பு தமிழ்நாட்டுக்கும் வந்து சேர்ந்தது. இனி அந்த கோப்பில் ஆளுநர் கையொப்பமிட வேண்டும். இதையடுத்து, தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் இன்று மாலை சென்னை வந்தார்.
இரவே அவசர சட்டம்
அதன் பிறகு அவர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்தில் கையொப்பமிட்டார். எனவே இன்று மாலை அவசர சட்டம் வெளியானது. இதனால் சட்ட தடை உடைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மதுரை பயணம்
ஜல்லிக்கட்டு நடத்த முன்னேற்பாடுகளை அலங்காநல்லூரில் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் நேற்று ஆய்வு செய்தார். இன்று இரவு 7.20 மணிக்கு சென்னையிலிருந்து மதுரைக்கு முதலமைச்சர் பன்னீர் செல்வம் விமானத்தில் செல்ல உள்ளார்.
விறுவிறு ஏற்பாடுகள்
அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு கமிட்டிகளுடன் மாவட்ட கலெக்டர், அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்த தொடங்கியுள்ளனர். வாடிவாசல் பகுதியை சுத்தப்படுத்தும் பணி, பார்வையாளர் மாடம் அமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த மூன்று இடங்களிலும் நாளை காலை 10 மணிக்கு ஜல்லிக்கட்டு நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளிவரும்
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே அளித்த பேட்டியில் கூறியபடி, வாடி வாசல் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளி வரும். இதன் வெற்றியை தங்களுக்கு உரித்தாக்கி கொள்ளும்வகையில், முதல்வரே போட்டியை நேரடியாக தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.