தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் கைது...அலங்காநல்லூர், பாலமேட்டில் போலீஸ் குவிப்பால் பதற்றம்!
மதுரை: உச்ச நீதிமன்ற தடையால் ஜல்லிக் கட்டை நடத்த மாட்டோம் என ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகளிடம் போலீஸ் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கியுள்ளனர். இதனை மீறி காளைகளை வாடிவாசல் உட்பட பொது இடங்களுக்கு அழைத்து வந்தால் கைது செய்யவும் நூற்றுக்கணக்கான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தடையால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஜனவரி15ம் தேதி அவனியாபுரம், ஜனவரி16ம் பாலமேடு, ஜனவரி17ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம்.
ஜனவரி 7ம் தேதி மத்திய அரசு அனுமதியளித்து பிறப்பித்த உத்தர காரணமாக வாடிவாசல், பார்வையாளர் மேடை அமைப்பது உட்பட பல பணிகள் அதிகாரிகள் முன்னிலையில் தீவிரமாக நடந்தன. உச்ச நீதிமன்ற தடையால் அனைத்து பணிகளும் உடனே நிறுத்தப்பட்டன.
அமைதி வழியில் போராட்டம்
ஜல்லிக் கட்டு நடைபெறும் பகுதிகளில் 5 நாட்களாக மறியல், உண்ணா விரதம், கடையடைப்பு என தொடர் போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்கு போலீஸார் அனுமதி பெறாதபோதும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அனுமதி அளிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், வன்முறைக்கு இடமின்றி அமைதியான வழியில் போராட்டம் நடந்து வருகிறது.
எழுதிவாங்கிய போலீசார்
பொங்கல் தினமான நேற்று ஜல்லிக்கட்டு நடக்க வேண்டிய அவனியாபுரத்தில் 300 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஜல்லிக்கட்டு காளைகள் வரலாம் என சந்தே கிக்கப்படும் தெருக்கள், மதுரை, திருப்பரங்குன்றம் சாலைகளில் ஏராளமான போலீஸார் நிறுத்தப்பட் டனர். ஜல்லிக்கட்டு நடத்த மாட்டோம் என கமிட்டி நிர்வாகிகளிடம் எழுதி வாங்கப்பட்டது.
உறுதிமொழி பத்திரம்
இது குறித்து கமிட்டி செயலர் ராமசாமி கூறும்போது, ‘நீதிமன்ற தடையால் ஜல்லிக்கட்டை நடத்த மாட்டோம் என வருவாய்த் துறையினர், போலீஸார் உறுதிமொழி பத்திரமாக எழுதி வாங்கிவிட்டனர். அரசுதான் ஜல்லிக்கட்டை நடத்தி தருகிறது. அரசின் ஆதரவும், நீதிமன்ற அனுமதியும் இருந்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த முடியும். நீதிக்கு கட்டுப்பட்டு காளைகளை எங்கும் வெளியே அழைத்துச் செல்ல மாட்டோம். அரசுக்கு முழுமையாக ஒத்துழைப்போம் என்று கூறினார்.
கைது செய்யத் திட்டம்
பாதுகாப்பையும் மீறி யாராவது ஜல்லிக்கட்டு காளைகளை தெருக்கள் வழியாகவோ, வாகனங்களில் ஏற்றி வாடிவாசல் அருகிலோ கொண்டுவர முயன்றால் அவர் களை தடுத்து திருப்பி அனுப்ப போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மீறினால் காளைகளுடன் கைது செய்யவும் போலீஸார் தயாராகி வருகின்றனர்.
பாதுகாப்பு பணியில் போலீஸ்
மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு கிராமங்களில் இன்றுமுதல் 1,500 போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வியாழக்கிழமை இரவு முதல் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் சுற்றுப் பகுதிகள் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டன.
ஜல்லிக்கட்டு நடக்கும் ஊர்கள் மட்டுமின்றி, வழக்கமாக காளைகள் கொண்டுவரப்படும் 50க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்கள் முழுவதிலும் போலீஸார் நிறுத்தப் படுகின்றனர்.
அலங்காநல்லூர், பாலமேடு
அனைத்து சாலைகள், தெரு சந்திப்புகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பில் ஈடுபட உத்தரவிடப்பட் டுள்ளது. வாகன சோதனை தீவிரப் படுத்தப்படுகிறது. இது குறித்து மதுரை மாவட்ட எஸ்.பி. விஜ யேந்திர பிதாரி கூறும்போது, ஜல்லிக்கட்டு நடக்கும் நாளில் மட்டுமே அந்தந்த பகுதிகளில் காளைகளை அவிழ்த்து விடுவர். இதனால் பாலமேட்டில் ஜனவரி 16, அலங்காநல்லூரில் ஜனவரி 17ம் தேதியும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.