அவசர சட்டம் வேண்டாம்..ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் தேவை.. மெரினாவில் இளைஞர்கள் முழக்கம்
சென்னை: ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடத்திட நிரந்தர சட்டம் தான் தீர்வாகும், எங்களுக்கு அவசர சட்டம் வேண்டாம் என மெரினாவில் 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாட்டை பறைசாற்றும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு உரிமையை மீட்க பல லட்சம் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பட்டவர்களும் ஒரு வார காலமாக அறவழியில் எழுச்சி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவசர சட்டத்துக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் நேற்று அனுமதி வாங்கியதாகவும், தமிழக ஆளுநரிடம் இன்று அனுமதி வாங்கியதாகவும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த அவசர சட்டத்தை ஏற்கமுடியாது எனவும் எங்களுக்கு தேவை நிரந்தர சட்டம் தான் எனவும் போராட்டத்தை தொடர போவதாக மெரினா போராட்டக்குழு அறிவித்துள்ளது. இது கண்துடைப்பு சட்டம். ஒரு நாள் ஜல்லிக்கட்டு நடத்த நாங்கள் கேட்கவில்லை.
எங்கள் கலாச்சாரத்தில் யாரும் கைவைக்க கூடாது என்று தான் கேட்கிறோம். அதனால நிரந்தரச் சட்டம் இயற்றும் வரை களைந்து போகமாட்டோம். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.
மேலும் மாலை நேரம் ஆகிவிட்டதால் செல்போன் டார்ச் லைட் அடித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதேபோல் திருச்சி, மதுரை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் கலந்துகொண்டுள்ளவர்களும் தெரிவித்துள்ளனர். இதனால் அவச சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஜல்லிக்கட்டு நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பம் நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications