அவசர சட்டத்தினால் மிருகவதை தடைச் சட்டத்தில் இருந்து ஜல்லிக்கட்டுக்கு விலக்கு-ஆளுநர்
சென்னை: அவசர சட்டத்தின் மூலம் மிருகவதை தடைச்சட்டத்தில் இருந்து ஜல்லிக்கட்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என ஜல்லிக்கட்டு அவசர சட்டம் தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்தும் விதத்தில் மாநில அரசு இயற்றிய அவசர சட்டத்திற்கு ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார். இதில் முக்கிய அம்சம் என்னவென்று, இன்று மாலை வித்யாசாகர் ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், மிருகவதை தடைச்சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டதால் ஜல்லிக்கட்டு தடை உடனடியாக நீங்குகிறது என கூறப்பட்டுள்ளது.
எனவே இந்த சட்ட முன்வரைவை சட்டசபையில் நிறைவேற்றினால் இது நிரந்தர சட்டமாகிவிடும் என மார்கண்டேய கட்ஜு போன்ற சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
ஆளுநர் அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது: தமிழக மக்களின் கலாசார உரிமையைக் காக்கும் பொருட்டும், மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு தடுக்கும் பொருட்டும் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த 1960ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மிருகவதைத் தடுப்பு சட்டத்தில் இருந்து காளைகளுக்கு விலக்கு அளிக்கும் பொருட்டு மாநில அரசு சார்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை உடனடியாக நீங்குகிறது.
தமிழக சட்டப்பேரவை வரும் 23ம் தேதி கூட உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் சட்டத்தைப் பிறப்பிப்பதற்கான நடைமுறைகளுக்கு ஏற்படும் காலதாமதத்தையும், தமிழகத்தின் இன்றைய சூழலலையும் கருத்தில் கொண்டு இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.