சென்னை, மதுரையைத் தொடர்ந்து... ஜல்லிக்கட்டை வலியுறுத்தி கோவையில் 12-ம் தேதி பேரணி !
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி தமிழகத்தில் தினந்தோறும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. கோவையிலும் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகிறார்கள்.
கோவை: சென்னை, மதுரையைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி கோவையில் வரும் 12 ஆம் தேதி பேரணி நடைபெறவுள்ளது. இதில் ஏராளமானோர் கலந்துகொள்ள வேண்டும் என சித்திக் என்பவர் பேஸ்புக் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்க கோரி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், மாடுபிடி வீரர்களும் மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
ஆனால் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இந்தாண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் எனக்கூறி சென்னை, மதுரை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கோவையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பேரணி நடைபெறவுள்ளது என்று சித்திக் என்பவர் தனது பேஸ்புக் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். கோவை கொடிசியா மைதானத்தில் வரும் 12 ஆம் தேதி மாலை 4 மாணிக்கு பேரணி துவங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை மெரினாவில் நேற்று நடைபெற்ற பேரணியில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர்.