For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லா சாலைகளும் மெரீனாவை நோக்கி..... குடும்பம் குடும்பமாக தமிழர் படை!

By Shankar
Google Oneindia Tamil News

தமிழ் இனத்தின் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக மாறியிருக்கிறது ஜல்லிக்கட்டுக்கான இளைஞர்கள் போராட்டம். இப்படி ஒரு கண்ணியமிக்க, அதே நேரம் அத்தனை சுலபத்தில் கலைத்துவிட முடியாத ஒரு பெரும் போராட்டத்தை சுதந்திர இந்தியா இதுவரை கண்டிருக்காது.

ஜல்லிக்கட்டு என்றால் என்னவென்றே தெரியாத, அதை செய்தித் தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் மட்டுமே பார்த்து வந்த சென்னை உள்ளிட்ட வட மாவட்ட தமிழர்கள் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரீனாவில் குவிந்து வருகின்றனர்.

Jallikkattu: All the routes lead to Marina

சென்னையிலிருந்து 130 கிமீ தொலைவிலுள்ள திண்டிவனத்திலிருந்து, பைக், கார்கள், மினி பேருந்துகள், பேருந்துகள், லாரிகள் என கிடைக்கிற வாகனங்களில் தொற்றிக் கொண்டு கிளம்புகின்றனர் மக்கள். ஆண், பெண், குழந்தைகள், இளைஞர்கள் என அனைவர் கைகளிலும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கான ஒரு அடையாளம் கட்டாயம் இருக்கிறது.

இந்தப் பக்கம் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட வடக்குப் பகுதி மக்கள் அதே போல திரண்டு வருகின்றனர். சென்னைக்கு மேற்கே என்றால், வேலூரிலிருந்து ஆரம்பிக்கிறது மெரீனா நோக்கிய பயணம். குறிப்பாக திருவள்ளுர், பூந்தமல்லியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் குழு குழுவாகக் கிளம்பி மெரீனாவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

மேல் மருவத்தூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, காட்டாங்கொளத்தூர், தாம்பரம் போன்ற பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் தனித்தனி குழுக்களாக அமர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவை தடை செய்யக் கோரியும் போராட்டம் நடத்தி வருவதைப் பார்க்க முடிந்தது. கற்பக விநாயகா என்ற தனியார் கல்லூரி முன்பு மாணவர்கள் திரளாக அமர்ந்து நடத்திய ஜல்லிக்கட்டுப் போராட்டம், அதற்கு அனுமதி அளித்து கல்லூரிக்கே விடுமுறை அளித்த நிர்வாகம்... இப்படி ஏகப்பட்ட உணர்ச்சிமயமான சம்பவங்கள், காட்சிகள்.

ஓஎம்ஆர் எனப்படும் பழைய மாமல்லபுரம் சாலையில் எங்கு பார்த்தாலும் தனித் தனிக் குழுக்களாக ஐடி துறை இளையோர் அறவழிப் போரில் ஈடுபட்டுள்ளனர். இவர்களையெல்லாம் தாண்டித்தான் இன்னொரு பெரும் தமிழர் படை மெரீனா நோக்கிப் பயணித்துக் கொண்டுள்ளது.

திண்டிவனத்திலிருந்து தாம்பரம் வரை, திருவள்ளூரிலிருந்து மதுரவாயல் வரை, காஞ்சிபுரத்திலிருந்து முடிச்சூர் வரை, பல சின்னச் சின்ன கிராமங்களில் குழந்தைகள்... 3 வயது முதல் 10 வயது வரையிலான குழந்தைகள் ஜல்லிக்கட்டு ஆதரவு பதாகைகளை வைத்துக் கொண்டு 'பீட்டா ஒழிக.. கோக், பெப்சி வேண்டாம்... காளை எங்க ப்ரண்டு... காளையோடு விளையாடு' என்று கோஷமிட்டபடி நிற்கும் காட்சியைப் பார்த்தபோது மகிழ்ச்சியில் மனசு தளும்பியது.

சுதந்திர இந்தியா இதுவரை பார்த்திராத போராட்டம் இது. ஆங்கிலேயரின் ஆட்சியில் இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்த நாட்களில் முதல் சுதந்திரப் போர் வெடித்தது, இதே தமிழகத்தில்தான்... வேலூரில். இன்று மத்திய அரசு மற்றும் மாநில உணர்வுகளை மதிக்காத நீதித்துறையின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் மாநிலங்களின் உரிமைக்கான முதல் சுதந்திரக் குரலும் இதே தமிழகத்திலிருந்துதான் என்பது வரலாறாகப் போகிறது!

English summary
People surrounding areas of Chennai city are rushing to Marina beach to join with the Jallikkattu protesters Today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X