பாஜக-தேமுதிக கூட்டணி அடுத்த வாரம் இறுதியாகும்: விஜயகாந்த்தை சந்தித்த பிறகு ஜவடேக்கர் பேட்டி
சென்னை: தமிழக பாஜக கூட்டணி அடுத்தவாரம் இறுதி செய்யப்படும் என்றும், விஜயகாந்துடனான பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்ததாகவும் மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கூட்டணிக் குறித்த பேச்சுவார்த்தைக்காக சென்னை வந்துள்ளார் மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர்.

நேற்று பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசிய ஜவடேகர், இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. கூட்டணி குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்பின் போது, ஜவடேகருடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மோகன்ராஜூலு ஆகியோரும், தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் அவரது மனைவி பிரேமலதா, மச்சினர் சுதீஷ், கட்சிக் கொறடா மோகன் ராஜூலு ஆகியோரும் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் ஜவடேகர். அப்போது அவர், ‘விஜயகாந்த்துடன் நல்ல முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. விஜயகாந்த்துடன் ஆலோசித்ததை பாஜக தலைவர் மற்றும் பிரதமரிடம் தெரிவிப்பேன்.
பட்ஜெட் கூட்டம் முடிந்ததும் பாஜக கூட்டணி கட்சிகள் பத்திரிகையாளர்களை சந்திப்போம். கூட்டணி குறித்த இறுதி முடிவு அடுத்த வாரம் தெரியவரும்.

விஜயகாந்த்துடன் இதுவரை நடந்த இருசந்திப்புகளும் மகிழ்ச்சியான முறையில் நடந்து முடிந்தது. தமிழக மக்களுக்கு நீதி வழங்குவதற்காக நாங்கள் வந்துள்ளோம்.
கடந்த 50 ஆண்டுகளில் தமிழகம் பெற்றதைவிட பெரிய நன்மையை இனி பெறும். மத்தியில் மோடி அரசு வழங்குவதை போன்ற நல்லாட்சி தமிழகத்திலும் மலரும். தமிழகத்துக்கு மோடி அரசு முழு உதவிகள் செய்து வருகிறது. தமிழகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது முதலில் ஓடி வந்தது பிரதமர் மோடி' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications