கொல்லைப் புறம் வழியாக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க துடிக்கிறது பாஜக.. ஜவாஹிருல்லா தாக்கு
சென்னை: கொல்லைப்புறம் வழியாக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கிறது பாஜக என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கடுமையாக சாடியுள்ளார்.
கடந்த 17 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா மருத்துவமனைக்கு சென்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
முதல்வரின் உடல் நலம் குறித்து நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்களிடம் விசாரித்தேன். அவர்கள் முதல்வரின் உடல் நலம் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், சிகிச்சை குறித்த விவரங்களை விளக்கிக் கூறினார்கள். முதல்வர் விரையில் குணமடைந்து பணிகளை தொடர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம்.
முதல்வர் மருத்துவமனையில் இருக்கும் நேரம் பார்த்து, சுப்பிரமணியன் சுவாமி, தமிழகத்தில் 356யை பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைத்துவிட்டு குடியரசு ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கூறுவதும், சட்டப்பேரவையை முடக்க வேண்டும் என்று கூறுவதும் கண்டனத்திற்குரியது. அவர் அப்படி கூறியிருப்பது தமிழக மக்களுக்கு எதிரானது. தமிழகத்தில் நேரடியாக கால் பதிக்க முடியாத பாஜக, கொல்லைப்புறம் வழியாக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கிறது. இதனை தமிழக மக்கள் எதிர்க்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா கூறினார்.












Click it and Unblock the Notifications