'ஜெ. விடுதலைக்காக' கேரளா முருகனுக்கு இன்று சிறப்பு பூஜைகள்- அமைச்சர் வேலுமணி பங்கேற்கிறார்
பாலக்காடு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்துள்ள சொத்துக் குவிப்பு வழக்கின் தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் கேரளா மாநிலம் பாலக்காடு அருகே உள்ள முருகன் கோயிலில் அண்ணா தி.மு.க.வினர் இன்று சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர். இதில் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் கலந்து கொள்ள இருக்கிறார்.
கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் மட்டுமின்றி கேரளாவுக்கும் அமைச்சர்கள் படையெடுத்துச் சென்று கோவில் கோவிலாக வழிபட்டு வருகின்றனர். கடந்த பிப்ரவரி 24-ந் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் வேலுமணி, கேரளாவின் சித்தூரில் உள்ள அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தி இருந்தார்.
இந்நிலையில் சித்தூர் அருகே உள்ள கொடும்பு முருகன் கோயிலில் இன்று ஜெயலலிதாவுக்காக சிறப்பு பூஜைகள் நடைபெற இருப்பதாக அப்பகுதி அண்ணா தி.மு.க.வினர் துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியிலும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கேரளா- தமிழக எல்லையான பாலக்காடு அருகே உள்ளது இந்த சித்தூர் கோயில். ஜெயலலிதாவுக்காக மாநிலம் மாநிலம் விட்டு நடத்தப்படுகிற வழிபாடுகள் கை கொடுக்குமா?












Click it and Unblock the Notifications