ஜெயலலிதா வீதி வீதியாக வாக்கு கேட்டு வரப் போகிறார்.. 6ம் தேதி.. சென்னை ஆர்.கே.நகரில்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா தான் போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் மே 6ம் தேதி வீதி வீதியாக வேன் மூலமாக பயணித்து வாக்கு கேட்டு வரப் போகிறார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னம் போட்டியிடுகிறது. இதில் 227 தொகுதிகளில் அதிமுக நேரடியாக போட்டியிடுகிறது. 7 தொகுதிகளை தனது கூட்டணிக் கட்சிகளுக்கு தனது சின்னத்தில் போட்டியிட ஒதுக்கியுள்ளது.

ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் 2வது முறையாக போட்டியிடுகிறார். சென்னையில் பிரச்சாரத்தைத் தொடங்கிய அவர் ஊர் ஊராகப் போய் பேசி வருகிறார். இதில் கூட்ட நெரிசல், வெயிலில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தனது ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை மறு நாள் அவர் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
6ம் தேதி போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் இருந்து வேன் மூலம் புறப்பட்டு ஆர்.கே.நகர் தொகுதியில் வீதி, வீதியாக சென்று தனக்கு ஆதரவு திரட்டுகிறார். முன்பு சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குப் போய் திரும்பிய பின்னர் நடந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது, தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம், கொருக்குப்பேட்டை உள்பட இடங்களில் ஜெயலலிதா திறந்தவேனில் பேசி வாக்குகள் சேகரித்தார்.
ராசி கருதி அதே இடங்களில் இப்போதும் ஜெயலலிதா பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா வருவதால் ஆர்.கே.நகரையே ஸ்தம்பிக்க வைக்க வகையில் அதிமுகவினர் தயாராகி வருகின்றனராம். மேலும் அவருக்கு வரும் வழியெல்லாம் பிரம்மாண்ட வரவேற்பும் கொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்களாம்.
எதற்கும் 6ம் தேதி ஆர்.கே.நகர் பக்கம் ஏதாவது வேலை இருந்தால் ஒத்தி வைத்து விட்டு வீட்டுக்குள்ளேயே ஓய்வெடுப்பது உசிதம்!












Click it and Unblock the Notifications