மறுபடியும் முதல்ல இருந்து... ஜெ. வழக்கால் தமிழகத்தின் கஜானா படும் பாடு!
சென்னை: தமிழக மக்களின் வரிப்பணம் மேலும் பல கோடி மீண்டும் விரயமாகப் போகிறது.. ஜெயலலிதாவுக்கு எதிரான கர்நாடக அரசின் மேல் முறையீட்டு மனு வழக்கால்.
மேலும் மீண்டும் ஜெயலலிதா விவகாரம் மறுபடியும் முதலில் இருந்து விசாரிக்கப்படவுள்ளது. இதனால் கால நேரம் மட்டுமல்ல தமிழக மக்களின் வரிப்பணம்தான் மீண்டும் வீணாகப் போகிறது.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு தொடர்பான கர்நாடக அரசின் வழக்கு தொடர்பான அனைத்து செலவுகளையும் தமிழக அரசுதான் மேற்கொள்ள வேண்டும் என்பதால், தமிழக மக்களின் வரிப்பணத்தைத்தான் மீண்டும் காவு கொடுக்கப் போகிறோம்.
இதில் என்ன விசேஷம் என்றால் தனக்கு எதிரான அப்பீல் வழக்குக்கான செலவுத் தொகையை ஜெயலலிதாதான்... அதாவது தமிழக முதல்வர் என்ற வகையில்... கர்நாடக அரசுக்குக் கொடுக்கப் போகிறார் என்பதுதான்.
ஜெயலலிதா வழக்கு ஒரு அரசியல் விசித்திரம். இத்தனை காலமாக இந்த வழக்கு இழுத்தடித்தது ஒரு பக்கம் இருக்க, இந்த வழக்கை உடைக்க செய்யப்பட்ட தகிடுதித்தனங்களைப் பற்றி தனிப் புத்தகமே போடலாம்... அவ்வளவு அக்கப்போரை பார்த்து விட்டன நீதிமன்றங்களும், மக்கள் மன்றமும்.
1991 முதல் 1996ம் ஆண்டு வரை முதல்வராக இருந்த காலத்தில் ஜெயலலிதா மற்றும் அவரைச் சுற்றியிருந்தவர்கள் செய்த காரியத்தால் அன்று முதல் இன்று வரை தமிழகம் சந்தித்த சோதனைகள் நிறைய நிறைய நிறைய... இன்று வரை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது அந்த துரதிர்ஷ்டம். ஜெயலலிதாவை மட்டுமல்ல, தமிழக மக்களையும் சேர்த்துத்தான்.
திமுக போட்ட வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெங்களூரு தனி நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த அப்பீல் மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் அத்தனை பேரையும் ஏக் தம்மாக விடுதலை செய்து உத்தரவிட்டது. நீதிபதி குமாரசாமியின் இந்த அதிரடி தீர்ப்பை நாடு முழுவதும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
ஆனால் அந்த ஆச்சரியம் அடுத்த சில மணி நேரத்திலேயே ஹாஸ்யமாகிப் போனது. காரணம், நீதிபதி குமாரசாமியின் கால்குலேட்டர் செய்திருந்த மிகப் பெரிய தப்புக் கணக்கு. அந்தத் தப்புக் கணக்கை சரி செய்ய நீதிபதி குமாரசாமி முயன்றும் கூட முடியாமல் போனது. ஆனால் அவரே திருத்தியிருந்தாலும் கூட ஜெயலலிதாவுக்குத்தான் பெரும் சிக்கலாகியிருக்கும்.
இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக அப்பீல் செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தியும் கூட, கப்சிப்பென்று காது குடைந்து கொண்டிருந்தது கர்நாடக அரசு. ஆனால் நாளுக்கு நாள் அதிகரித்த நெருக்கடி, வேறு வழியில்லாமை ஆகியவற்றின் காரணமாக தற்போது சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப் போகிறது கர்நாடக அரசு.
எனவே மீண்டும் ஜெயலலிதா வழக்கு உயிர் பெறுகிறது. மறுபடியும் முதலில் இருந்து வாதப் பிரதிவாதங்கள் களை கட்டப் போகின்றன. சுப்ரீம் கோர்ட் பல சூடான வாதங்களையும், அதிரடி உத்தரவுகளையும் காணப் போகிறது. தமிழக மக்களின் வரிப்பணம் கஜானாவிலிருந்து மீ்ண்டும் கரையப் போகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம்!












Click it and Unblock the Notifications