பிரதமர் பதவியை 'ராஜினாமா' செய்தார் ஜெயலலிதா: பிரசாரத்தில் பேச்சை மாற்றினார்...
தேனி: "மத்தியில் அ.தி.மு.க அங்கம் வகித்தால் ஒரே தவணையில் தமிழக திட்டங்கள் விரைந்து முடிக்க ஏற்பாடு செய்யப்படும்" என்று தேனியில் நடந்த பிரசாரத்தின்போது முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ஆக இதுநாள்வரை பிரதமர் கனவோடு பிரச்சாரம் செய்து வந்த ஜெயலலிதா தற்போது மத்திய அரசில் அங்கம் வகிப்பது பற்றி பேசத் தொடங்கியுள்ளார்.
சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கூடிய செயற்குழு கூட்டத்தில் பேசிய போது டெல்லி செங்கோட்டையை அடைய ரெட்போர்ட் எக்ஸ்பிரஸ் கிளம்பிவிட்டது என்று கூறியிருந்தார். அதிமுகவினரும் அம்மா, பிரதமர் ஆவார் என்று கூறிவருகின்றனர். ஆனால் முதல்வர் ஜெயலலிதாவோ தனது பிரச்சார ஸ்டைலையே மாற்றி வருகிறார்.

தேனியில் பிரச்சாரம்
தேனி நாடாளுமன்ற அ.தி.மு.க வேட்பாளர் கூழையனூர் ஆர்.பார்த்திபனை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று பிரசாரம் மேற்கொண்டார். மாலையில் நடைபெறவிருந்த கூட்டத்திற்கு காலை 9 மணியிலிருந்தே ஆட்கள் வரத்தொடங்கினர்.
வெயிலின் தாக்கம் மக்கள் வாட்டி வதைக்க பிற்பகல் 3.54 மணிக்கு வந்த ஹெலிகாப்டரில் ஜெயலலிதா வந்திறங்கினார். நேரடியாக மேடைக்கு வந்தவர் தன்னுடைய பேச்சைத் தொடங்கினார்.

குடிநீர் பிரச்சினை தீர
அப்போது, "தேனி புதிய தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேனி அல்லி நகரம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க 63 கோடியே 83 லட்சம் செலவில் குடிநீர் திட்டம் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பென்னிகுக் மணிமண்டபம்
தேனி திண்டுக்கல் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களின் விவசாயத்திற்கு ஆதாரமாய் திகழும் முல்லைப்பெரியாறு அணையை கட்ட தன்னுடைய சொந்த பணத்தை செலவு செய்த பென்னிகுக் அவர்களுக்கு லோயர்கேம்ப் பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியப்பகுதியில் 1 கோடியே 75 லட்சம் செலவில் திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

மத்தியில் அங்கம் வகித்தால்…
போடி- மதுரை ரயில் பாதையை மீட்டர்கேஜ் பாதையிலிருந்து அகல ரயில்பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்க 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால் இந்த பணத்தை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது. இதுவே அதிமுக மத்தியில் அங்கம் வகித்தால் ஒரே தவணையில் அதை விரைந்து முடிக்க ஏற்பாடு செய்யப்படும்" என்றார்.

பிரதமர் கோஷம் என்ன ஆச்சு?
முதல்வரின் பேச்சை கவனித்தால்... பிரதமர் கோஷத்தை கைவிட்டுவிட்டு... இப்போது அங்கம் வகிப்பதைப் பற்றியே பேசுகிறார். தேர்தலுக்குப் பின்னர் பாஜக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்க இப்போதே தயாராகிவிட்டாரோ முதல்வர் ஜெயலலிதா என்று கேட்கத்தொடங்கியுள்ளனர் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications