ஜெயலலிதா முழுமையாக குணமடைந்துவிட்டார்: சி.ஆர்.சரஸ்வதி தகவல்
சென்னை: கடந்த மாதம் 22ம் தேதி இரவு முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சுமார் ஒரு மாதமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் முதல்வர் நலம்பெற வேண்டி அதிமுகவினர் தினந்தோறும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜெயலலிதா பூரண நலமடைந்துவிட்டதாக அதிமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் உதவியுடன், ஜெயலலிதா விரைந்து குணமடைந்து வருகிறார். விரைவிலேயே அவர் வீடு திரும்புவார்.
தனது வாழ்க்கை முழுக்க தமிழக மக்கள் நலனுக்காக அர்ப்பணித்தவர் ஜெயலலிதா. தற்போது டாக்டர்கள் அறிவுரைப்படி அவர் மருத்துவமனையில் ஓய்வில் மட்டும்தான் உள்ளார். அவர் தற்போது முழுக்க குணமடைந்துவிட்டார்.
ஜெயலலிதா வீடு திரும்பிய பிறகு மேலும் பல நல திட்டங்களை தமிழக மக்களுக்காக அறிவிப்பார் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு சரஸ்வதி தெரிவித்தார்.
முன்னாள் அதிமுக அமைச்சரும், பாஜகவை சேர்ந்தவருமான ஹெச்.வி.ஹண்டே, அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்தார். இன்னும் ஒரு வாரத்திற்குள் ஜெயலலிதா வீடு திரும்பிவிடுவார் என ஹண்டே தெரிவித்தார்.