சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.. பிரதமருக்கு அனுப்பி வைத்தார் ஜெ.
சென்னை காமன்வெல்த் மாநாடு தொடர்பாக தமிழக மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். எனவே இந்த மாநாட்டை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைப் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்துடன் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலையும் அவர் இணைத்துள்ளார்.
முதல்வரின் கடிதம்...

காமன்வெல்த் மாநாடு
கடந்த 25.3.2013, 17.10.2013 அன்றைய தேதிகளில் நான் உங்களுக்கு எழுதிய கடிதங்களை மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அந்த கடிதங்களில் நான், இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை தமிழர்கள் மீது நடந்த இனப்படுகொலைகளையும், இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களையும் தொடர்ந்து நடந்த மனித உரிமைகள் மீறல் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகள், சம உரிமைகள் பறிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி இலங்கையில் நவம்பரில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது என்று குறிப்பிட்டு இருந்தேன்.

பெயரளவுக்குக் கூட யாரும் போகக் கூடாது
இதைத்தொடர்ந்து 24.10.2013 அன்று தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்றும், பெயரளவுக்குக்கூட இந்தியா சார்பில் பிரதிநிதிகள் யாரும் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது என்றும், இதுகுறித்து இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும், இலங்கை தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாகவும் வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கையை தற்காலிகமாக நீக்கிவைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் இந்திய அரசாங்கத்தை கேட்டுக்கொள்ளப்பட்டது.

கொஞ்சம் கூட மதிப்பளிக்கவில்லை
இந்த தீர்மானம் எனது 25.10.2013 அன்றைய தேதியிட்ட கடிதம் மூலம் உங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. மிகவும் வருந்தத்தக்க வகையில் தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு கொஞ்சம்கூட மதிப்பளிக்காமல் மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் தலைமையில் ஒரு தூதுக்குழுவை காமன்வெல்த் மாநாட்டுக்கு அனுப்பி வைத்து, இந்த மாநாட்டில் கலந்துகொள்ள மத்திய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

உணர்வுகளை சட்டை செய்யவில்லை
இலங்கை அரசாங்கத்துக்கு கடுமையான செய்தியை அனுப்புவதற்கு பதிலாக, தமிழக மக்களின் உணர்வுகளை கொஞ்சம்கூட சட்டை செய்யாமல், தமிழக மக்களை மட்டந்தட்டும் வகையிலும், தமிழக சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்துக்கு மதிப்பளிக்காமலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த உணர்ச்சிபூர்வமான விஷயத்தில் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்ற உணர்வு மக்களிடம் இருக்கிறது.

மக்கள் கொந்தளித்துள்ளனர்
மத்திய அரசாங்கத்தின் இந்த முடிவால் மக்களிடையே ஏற்பட்டுள்ள கொந்தளிப்பையும், அரசியல் உணர்வுகளையும் கருத்தில் கொண்டு தமிழக சட்டசபையில் இந்த உணர்ச்சிகரமான விவகாரம் குறித்து விவாதிக்க 12.11.2013 அன்று சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. இலங்கையில் நடைபெறும் இந்த காமன்வெல்த் மாநாட்டையும், அது தொடர்பான கூட்டங்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி மீண்டும் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பரிசீலியுங்கள், நடவடிக்கை எடுங்கள்
உங்களின் அவசர பரிசீலனைக்கும், உடனடி நடவடிக்கைக்கும் 12.11.2013 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications