தேவர் கனவுப்படி காங்.கை விரட்டியடிப்போம் - நினைவிடத்தில் ஜெ. முழக்கம்
பசும்பொன்: ஆன்மீகம், தேசியம், பொதுவுடமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, காங்கிரஸ் இல்லாத ஆட்சி ஆகியவை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் முக்கிய கொள்கைகளாக இருந்தன. இந்த கொள்கைகளை தான் நாங்களும் பின்பற்றி வருகிறோம். உங்கள் ஆதரவுடன், தேவரின் கொள்கைகளை செயல்படுத்த வேண்டிய நாள் வெகு தூரத்தில் இல்லை. அதற்கான காலம் கனிந்துவிட்டது. உங்கள் அனைவரின் ஆதரவுடன் அது விரைவில் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
பசும்பொன் கிராமத்திற்கு இன்று வந்த முதல்வர் ஜெயலலிதா அங்கு தேவர் சிலைக்கு தங்கக் கவசத்தை அணிவித்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், முத்துராமலிங்கதேவரின் சிலைக்கு, அதிமுக, சார்பில், 13 கிலோ எடையில் தங்க கவசம் அணிவிப்பதில் பெருமை அடைகிறேன்.
தேசியம், தெய்வீகம் ஆகியவற்றை இரு கண்களாக கொண்டு செயல்பட்டவர் முத்துராமலிங்க தேவர். சுதந்திரத்திற்காக பாடுபட்டவர். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவராக அவர் இருந்தார்.
மக்கள் மற்றும் தொழிலாளர்கள் நலனுக்காக அயராது பாடுபட்டவர். வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம், விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம் என்று முழங்கியவர். இக்காலத்திற்கும் இது பொருத்தமாக உள்ளது.
ஆன்மீகம், தேசியம், பொதுவுடமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, காங்கிரஸ் இல்லாத ஆட்சி ஆகியவை அவரின் முக்கிய கொள்கைகளாக இருந்தன. இந்த கொள்கைகளை தான் நாங்களும் பின்பற்றி வருகிறோம்.
உங்கள் ஆதரவுடன், தேவரின் கொள்கைகளை செயல்படுத்த வேண்டிய நாள் வெகு தூரத்தில் இல்லை. அதற்கான காலம் கனிந்துவிட்டது. உங்கள் அனைவரின் ஆதரவுடன் அது விரைவில் நிறைவேற்றப்படும் என்று கூறினார் ஜெயலலிதா.