சென்னையில் 16 தொகுதிகளையும் குறிவைக்கும் அதிமுக... மாஸ் வெற்றி கிடைக்குமா?
சென்னை: சட்டசபை தேர்தலில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளிலும் தனது கட்சி வேட்பாளர்களை களமிறக்க ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சட்டசபை தேர்தலைப் போல அல்லாமல் இந்த முறை சென்னையில் உள்ள மொத்த தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2014 லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்ட அதிமுக இம்முறையும் சிறிய கட்சிகளை மட்டுமே தன்னுடன் வைத்துக்கொண்டு தனியாக தேர்தலை சந்திக்கிறது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் அதிமுகவிற்கு சட்டசபை தேர்தலில் கடுமையான அடி விழும் என்று பேசப்பட்டு வரும் நிலையில், சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்த ஜெயலலிதா முடிவு செய்துள்ளாராம்.
அதிமுக இரட்டை இலை
இதுவரை 7 சிறிய கட்சிகளிடம் ஜெயலலிதா பேசியுள்ளார். கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளும் அ.தி.மு.க. சின்னமான இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
200 தொகுதிகளில் போட்டி
சிறிய கட்சிகளுக்கு ஒற்ற இலக்கத்தில் இடங்களை ஒதுக்கி விட்டு 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த முதல்வர் ஜெயலலிதா ஆலோசித்து வருகிறார்.
கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் 14 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
சென்னை 16
அதிமுக போட்டியிட்ட 12 தொகுதிகளில் 11 இடங்களை கைப்பற்றியது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தே.மு.தி.க. ஆலந்தூர், எழும்பூர், விருகம்பாக்கம் தொகுதிகளிலும், பெரம்பூர் தொகுதியில் மார்க்சிஸ்டு கட்சியும் வெற்றி பெற்றது. இம்முறை 16 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை களமிறக்க ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக - காங்கிரஸ் கூட்டணி
கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரசுக்கு 5 தொகுதிகளையும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு ஒரு தொகுதியும் (துறைமுகம்), பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு (பெரம்பூர்) ஒரு தொகுதியும் ஒதுக்கி விட்டு 9 தொகுதிகளில் திமுக போட்டியிட்டது. இதில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் ஜெ.அன்பழகன் மட்டுமே வெற்றி பெற்றனர்.
அறுவடை செய்வாரா?
இந்த தேர்தலில் அதிமுக அணியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் எதுவும் இடம் பெறவில்லை. கூட்டணியில் இடம் பெறும் சிறிய கட்சிகளுக்கு சென்னையில் தொகுதிகளை ஒதுக்க வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. எனவே 16 தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக அத்தனையையும் மாஸ் ஆக அள்ளுமா அல்லது வாஷ் அவுட் ஆகுமா?
தி. நகரில் ஜெ.
கடந்த ஆண்டு ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை தி.நகரில் ஜெயலலிதா போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மழை வெள்ள பாதிப்பு அதிமுகவை தாக்குமா? அல்லது அத்தனை தொகுதிகளையும் அதிமுக அறுவடை செய்யுமா?












Click it and Unblock the Notifications