ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை: கருணாநிதி-ஸ்டாலின் வீடுகளில் போலீசார் கண்காணிப்பு
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணை இன்று நடைபெற்றதை அடுத்து சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வீடுகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியான 27ஆம் தேதியன்று தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீட்டு முன்பு மோதல் ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு சமரசம் செய்தனர்.
கடந்த 27-ஆம் தேதி முதல் சிறையில் இருந்து வரும் ஜெயலலிதாவை விடுதலை செய்ய கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவதால் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரது வீடுகளின் முன்பு போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீது பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. ஆனால் ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதனையடுத்து அ.தி.மு.க. தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இந்தநிலையில் கோபாலபுரம் மற்றும் சி.ஐ.டி. காலனியில் உள்ள கருணாநிதியின் வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீடு ஆகியவற்றிலும், அண்ணா அறிவாலயத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கருணாநிதி, ஸ்டாலின் வீடுகள் மற்றும் அண்ணா அறிவாலயத்தில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்று விடக் கூடாது என்பதற்காகவே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.