அதிமுகவிலிருந்து மாஜி டிஜிபி ஆர். நடராஜ் டிஸ்மிஸ்... !
சென்னை: முன்னாள் டிஜிபி ஆர். நடராஜ் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். கட்சியில் சேர்ந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே அவர் நீக்கப்பட்டுள்ளார்.
நடராஜை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைப்பதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும், முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த ஆர்.நடராஜ் (முன்னாள் காவல்துறை இயக்குநர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆர். நடராஜ், மறைந்த குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமனின் உறவினர் ஆவார். சென்னை மாநகர காவல்துறை ஆணையர், உள்ளிட்ட பதவிகளில் இருந்தவர். தீயணைப்புத் துறை டிஜிபியாக ஓய்வு பெற்றார். சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவிக்காக கடுமையாக போராடியவர். அதற்காக நீதிமன்றத்தையும் அணுகி அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். ஆனால் அது கிடைக்காமலேயே போனது.

நேர்மையான அதிகாரியாக அறியப்பட்ட இவர் திடீரென அதிமுக பக்கம் திரும்பினார். ஜெயலலிதா முதல்வரானதும் இவருக்கு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி கிடைத்தது. கடந்த 2012ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்ட இவர் 2013ம் ஆண்டு மார்ச் மாதம் வரை அப்பதவியில் இருந்தார்.
அதன் பின்னர் அவர் அதிமுகவில் இணைந்தார். அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி நடராஜ் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் இணைந்தும் கூட அவருக்குப் பெரிய பதவி ஏதும் தரப்படவில்லை. அதேசமயம், காவல்துறை தொடர்பான நிர்வாகத்தில் நடராஜின் ஆலோசனைகள் பெறப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.












Click it and Unblock the Notifications