மறுபடியும் ஒரு விடுமுறைச் சிக்கலில் ஜெயலலிதா....!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கும் மீண்டும் ஒரு விடுமுறைச் சிக்கல் வந்துள்ளது.
அதாவது சுப்ரீம் கோர்ட்டுக்கு அக்டோபர் 18ம் தேதி முதல் 26ம் தேதி வரை தீபாவளி விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே அதற்குள்ளாக ஜாமீன் பெற்றாக வேண்டிய நிலையில் ஜெயலலிதா உள்ளார்.
ஏற்கனவே இப்படித்தான் செப்டம்பர் 27ம் தேதி ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோதும் கூட கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு தசரா விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் அவரது ஜாமீன் மனு விடுமுறை கால நீதிபதி முன்பு விசாரணைக்குப் போனது.
ஆனால் அவரோ விசாரணையை தள்ளி வைத்தார். இதனால் தலைமை நீதிபதி வரை நெருக்கடி கொடுத்து மீண்டும் அதே நீதிபதியை விசாரிக்க வைத்தது அதிமுக. ஆனால் 2வது முறை மனுவை விசாரிக்கக் கூடச் செய்யாமல் நீதிபதி தள்ளி வைத்து விட்டார். பின்னர் ரெகுலர் பெஞ்ச் விசாரணைக்காக ஜெயலலிதா தரப்பு காத்திருக்க நேரிட்டது.
இதேபோல தற்போது உச்சநீதிமன்றத்திற்கு அக்டோபர் 18ம் தேதி தீபாவளி விடுமுறை தொடங்குகிறது. 26ம் தேதி வரை விடுமுறையாக இருக்கும். இன்று அக்டோபர் 9ம் தேதியாகும். 18ம் தேதிக்குள் ஜாமீன் பெற்றாக வேண்டிய நிலை. ஆனால் எப்படியும் ஜாமீன் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் ஜெயலலிதா தரப்பு வக்கீல்கள் உள்ளனர்.