தமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் காங்கிரஸை தூக்கி எறியுங்கள்- ஜெ.
நாகர்கோவி்ல்: ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினை, காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை என அனைத்துப் பிரச்சினையிலும் தமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை வரும் தேர்தலில் மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா இன்று நாகர்கோவிலில் பிரசாரம் மேற்கொண்டு பேசினார். நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வந்த ஜெயலலிதா பின்னர் அங்கிருந்து இந்துக் கல்லூரி அருகே உள்ள பொருட்காட்சி மைதானத்திற்கு வந்து சேர்ந்தார்.
வரும் வழியெங்கும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு நின்று முதல்வரை வரவேற்றனர். பொருட்காட்சி மைதானத்தில் நடந்த கூட்டத்தில் கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் ஜான் தங்கத்தை ஆதரித்து முதல்வர் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசின் பல்வேறு தவறான கொள்கைகளில் கடந்த பத்து ஆண்டுகளாக அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவு பெருகிவிட்டது. இதற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படுவது தான் முக்கிய காரணமாகும்.
அரசு நிர்ணயித்து வந்த பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியதால் அந்நிறுவனங்கள் அடிக்கடி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துகிறது. இதன் காரணமாகவே பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டது.
காவிரி, முல்லைப் பெரியாறு, தமிழக மீனவர்கள் விவகாரம் மற்றும் ஈழத்தமிழர் விவகாரங்களில் தொடர்ந்து மத்திய அரசு துரோகம் இழைத்து வருகிறது. அத்தகைய மத்திய அரசை மக்கள் தூக்கியெறியவேண்டும்.
இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எனது தலைமையிலான அதிமுக அரசே வழிவகை செய்தது. ஆனால் திமுக தலைவர் கருணாநிதி அதை மறைத்து திமுக தான் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுத்ததாக கூறுவது தவறு என்றும் தெரிவித்தார்.