நேற்று திமுகவுக்கு வாழ்த்து, இன்று ஸ்டாலினுக்கு வணக்கம்: ஆளே மாறிப் போன ஜெ.
சென்னை: நேற்று திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா இன்று அவரை சட்டசபையில் பார்த்ததும் வணக்கம் கூறி அசத்தியுள்ளார்.
திமுகவும், அதிமுகவும் எலியும், பூனையுமாக மோதிக் கொள்வார்கள் என்று தான் மாநில, தேசிய, சர்வதேச அளவில் மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. அந்த அளவுக்கு அவர்கள் மோதிக் கொள்வார்கள்.
அறிக்கை மூலமாகவும் தொடர் போர் நடந்து வந்தது.

பிரச்சாரம்
சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுகவினர் மேடைதோறும் ஜெயலலிதாவை தாக்கிப் பேசினார்கள். சொன்னீங்களே, செஞ்சீங்களா? என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று ஜெயலலிதாவை குறி வைத்து பிரச்சாரம் செய்தார்கள்.

ஜெயலலிதா
தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜெயலலிதா திமுக தலைவர் கருணாநிதியின் குடும்ப அரசியல் பற்றி மேடைதோறும் விமர்சித்தார். இப்படி தேர்தல் நேரத்திலும் கூட அவர்கள் மோதிக் கொண்டிருந்தனர்.

அறிக்கை
ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றுக் கொண்ட விழாவில் திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு பின் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டதை அறிந்து கருணாநிதி கோபமாக அறிக்கை விட்டும் ஜெயலலிதா சாந்தமாக பதில் அறிக்கைவிட்டார்.

வாழ்த்து, வணக்கம்
இருக்கை பிரச்சனை குறித்து விளக்கம் அளித்த ஜெயலலிதா தமிழகத்தின் மேம்பாட்டிற்காக செயல்படும் ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் சட்டசபையில் இன்று ஸ்டாலினும், ஜெயலலிதாவும் ஒருவருக்கு ஒருவர் வணக்கம் தெரிவித்துள்ளனர்.

நல்லது தான்
ஜெயலலிதா திமுகவை வாழ்த்தியதுடன் இன்று ஸ்டாலினை நேரில் பார்த்தபோது வணக்கம் கூறியது மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இதன் மூலம் சட்டசபையில் இருந்து திமுகவினர் அடிக்கடி வெளியேற்றப்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications