ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் தியானம்... ஒளிபரப்பாத ஜெயா டிவி
ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நடத்திய தியான போராட்டத்தை தமிழக தொலைக்காட்சிகள் பரபரப்பாக ஒளிபரப்பிய நிலையில் ஜெயா டிவி ஒளிபரப்பவில்லை.
சென்னை: தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது பதவியை ஞாயிறன்று ராஜினாமா செய்தார். இதனையடுத்து சட்டசபைக் குழு தலைவராக சசிகலாவை தேர்வு செய்தனர். விரைவில் சசிகலா முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்பட்டது.
சசிகலா முதல்வராக பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த இரண்டு தினங்களாக ஓ.பன்னீர் செல்வம் போயஸ்கார்டன் செல்லவில்லை. இதுவே ஒருவித கேள்வியை ஏற்படுத்தியது.

இரண்டு முறை முதல்வராக இருந்து பதவி விலகிய போது அது ஜெயலலிதாவிற்காக பாதுகாத்து வைத்திருந்த பதவியை பத்திரமாக விட்டுக்கொடுத்தார். மூன்றாவது முறையாக ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம் 62 நாட்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான நிர்பந்தம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இரண்டு நாட்களாக மவுனமாக இருந்த ஓ.பன்னீர் செல்வம் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்பது தெரியாமல் இருந்த நிலையில் திடீரென இரவு 9 மணியளவில் மெரீனா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் திடீரென கண்ணை மூடி அமர்ந்து தியானம் மேற்கொண்டார்.
அரை மணி நேரத்திற்கும் மேலாக தியானம் செய்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மவுனம் கலைந்து என்ன பேசப்போகிறார் என்பதை கேட்க ஆவலுடன் காத்திருந்தனர். திடீரென தியானத்தை கலைத்த ஒ.பன்னீர் செல்வம், மெதுவாக எழுந்து ஜெயலலிதா நினைவிடத்தை சுற்றி வந்து வணங்கினார். தொடர்ந்து சசிகலா மீது சராமரி குற்றச்சாட்டுகளை முன் வைத்தார் ஒ.பன்னீர் செல்வம்.
ஒ.பன்னீர் செல்வம் அமைதியாக அமர்ந்தது தமிழகம் முழுவதும் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த காட்சியை அனைத்து தொலைக்காட்சிகளும் நேரடியாக ஒளிபரப்பின. ஆனால் இந்த காட்சியை ஜெயா தொலைக்காட்சி ஒளிபரப்பவில்லை என்பதுதான் கொடுமை.












Click it and Unblock the Notifications