ஜெயலலிதா காலமானதாக ஜெயா பிளஸ் டிவியிலேயே நியூஸ்… பதறியடித்து மறுத்த டிவி நிர்வாகம்
ஜெயலிதா காலமானதாக தவறான செய்தியை ஜெயா பிளஸ் டிவி ஒளிபரப்பிவிட்டு பின்பு தடாலடியாக மாற்றிவிட்டது.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார் என்ற தவறான செய்தியை அதிமுகவின் அதிகாரபூர்வ செய்தி தொலைக்காட்சியான ஜெயா பிளஸ் ஒளிப்பரப்பியுள்ளது. பின்னர், அதனை டிவி நிர்வாகம் மறுத்துள்ளது.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் நிலை மிக மோசமாக உள்ளது என்று அப்போலோ நிர்வாகம் அறிவித்தது. இதனால் தமிழகம் முழுவதும் பதற்ற நிலை உருவானது. இதனைத் தொடர்ந்து மாலை 5.40 மணியளவில் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை சில தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.
இதனால், தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக தொண்டர்கள் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்நிலையில் 5.49 மணியளவில் அப்போலோ நிர்வாகம், முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் மரணம் என்று வெளியான செய்தி தவறானது என்றும் கூறியது. இதன் பின்னர், அதிமுக தொண்டர்கள் அமைதியானர்கள். அவர்களின் முகங்களில் இருந்த சோகம் மாறி இயல்பு நிலைக்கு திரும்பின.
இதுவெல்லாம் இப்போதைக்கு பெரிய செய்தி அல்ல. அதிமுகவின் அதிகார பூர்வ தொலைக்காட்சியான ஜெயா பிளஸ்சில் "தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காலமானார்" என்று சிலைட் போடப்பட்டுள்ளது. அதிமுகவின் அதிகாரபூர்வமான தொலைக்காட்சியே ஜெயலலிதா மரணம் அடைந்தார் என்ற செய்தியை வெளியிட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர், இதுகுறித்த செய்தியை ஜெயா பிளஸ் நீக்கிவிட்டது. மேலும், அப்படி செய்யவில்லை என்று ஜெயா தொலைக்காட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனாலும், அவர்கள் வெளியிட்ட "தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காலமானார்" என்ற சிலைட் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.