வடக்கில்தான் மோடி அலை... தமிழகத்தில் 'ஒன்லி லேடி' அலை.. உற்சாகத்தில் அதிமுக தொண்டர்கள்!
சென்னை: 15 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக தமிழகத்தில் அமோக வெற்றி பெறுகிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் அதிமுக முன்னிலை வகிக்கிறது. கிட்டத்தட்ட அத்தனை கட்சிகளையும் ஜெயலலிதா அலை மூழ்கடித்திருப்பதாகவே கருதப்பட வேண்டியுள்ளது.

வடக்கில்தான் மோடி அலை.. இங்கு இந்த லேடி அலைதான் என்பதை ஜெயலலிதா ஜெயலலிதாவின் வாக்கு கிட்டத்தட்ட பலித்து விட்டது.
எங்கு பார்த்தாலும் மோடி அலை வீசுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அந்த அலையின் சந்தடி கூட இல்லாத அளவுக்கு அதிமுக அமோக வெற்றியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது தமிழகத்தில்.
மேலும் எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகளையும் அதிமுக தூக்கித் தூர எறிந்துள்ளது. கிட்டத்தட்ட தமிழகத்தில் அத்தனை எதிர்க்கட்சிகளையும் அது தூக்கிப் போட்டு நசுக்கி விட்டதாகவே தெரிகிறது.
அதை விட முக்கியமாக தனித்து நின்று இத்தனை பெரிய வெற்றியை அதிமுக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு கடைசியாக 1998 தேர்தலில் அதிமுக 18 தொகுதிகளில் அதிகபட்சமாக வென்றிருந்தது. அதன் பின்னர் இப்போதுதான் மிகப் பெரிய வெற்றியை அது பெறுகிறது.
தேமுதிகவின் வாய்ச் சவடால், ஊர் ஊராகப் போய் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சுக்கள், விஜயகாந்த்தின் கிண்டல்கள் உள்ளிட்ட அத்தனையையும் தனி ஒரு மனுஷியாக ஜெயலலிதா முறியடித்துள்ளார். இது மிகப் பெரிய சாதனைதான். மோடி தாக்கத்தையும் தாண்டி தமிழகத்தில் லேடியின் தாக்கம் வென்றிருப்பது அதிமுகவினருக்கு காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளும் அளவிலான வெற்றிதான் இது.
இந்த மகத்தான வெற்றியை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications