சென்டிமென்ட்டாக ஸ்ரீரங்கம் சரியில்லையே.. திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட ஜெ. ப்ளான்!!
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார். மேலும் 6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏ. வாக தேர்வு செய்யப்பட வேண்டி இருப்பதால் இந்த முறை திருச்செந்தூர் தொகுதியில் அவர் போட்டியிடக் கூடும் என அண்ணா தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதால் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்பதில் இருந்த சட்டப்பூர்வ தடைகள் நீங்கியுள்ளன. எனவே ஓரிரு நாட்களில் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் கிடைத்ததும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை கூடி ராஜினாமா செய்வதாக தீர்மானம் நிறைவேற்றும். இதையடுத்து அமைச்சரவை ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ரோசைய்யாவிடம் பன்னீர்செல்வம் அளிப்பார்.

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
இதனைத் தொடர்ந்து புதிய ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார். அதன்பிறகு அண்ணா தி.மு.க. எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டு, சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்படுவார்.

ஓரிரு நாட்களில்..
புதிய முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பட்டியல் ஆளுநரிடம் அளிக்கப்படும். இந்த நடைமுறைகள் ஓரிரு நாட்களில் முடியும் என தெரிகிறது. அதைத் தொடர்ந்து முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்க வாய்ப்புள்ளது. அவருடன் புதிய அமைச்சரவையும் பொறுப்பேற்கும்

6 மாதத்துக்குள் எம்.எல்.ஏ.
ஜெயலலிதா தற்போது எம்.எல்.ஏ.வாக இல்லாததால், முதல்வராக பதவியேற்ற 6 மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும். ஜெயலலிதாவுக்காக யாராவது ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்தால் அந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.

ஸ்ரீரங்கம் சரியில்லையே...
ஜெயலலிதா எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அண்ணா தி.மு.க.வினரிடையே எழுந்துள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில் ஏற்கெனவே வெற்றி பெற்று பதவி இழந்ததால் சென்டிமென்ட்டாக அந்தத் தொகுதியை ஜெயலலிதா விரும்பமாட்டார் என்ற தகவலை கட்சியினர் மறுக்கவில்லை.

திருச்செந்தூர்..
இதனால் தொண்டாமுத்தூர் அல்லது திருச்செந்தூர் தொகுதிகளும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில்தான் ஜெயலலிதா போட்டியிடுவதற்கு அதிகவாய்ப்புகள் இருப்பதாகவும் அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனிதா ராதாகிருஷ்ணன்..
2011 ஆம் ஆண்டு தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் தி.மு.க.வைச் சேர்ந்த அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றிருந்தார். அவர் தற்போது தி.மு.க. தலைமை மீது அதிருப்தியில் இருந்து வருகிறார். அண்மைக்காலமாக அண்ணா தி.மு.க.வில் அவர் ஐக்கியமாகக் கூடும் என்று கூறப்பட்டு வருகிறது.
இதே தொகுதியில் 2001, 2006 ஆகிய தேர்தல்களிலும் அ.தி.மு.க. வேட்பாளராக அனிதா ராதாகிருஷ்ணனே வென்றிருந்தார். இதனால் அனிதாவை வளைத்துப் போட்டால் ஜெயலலிதாவுக்கு கூடுதல் பலம் சேரும் என்பதால் அண்ணா தி.மு.க. இந்த விவகாரத்தில் மும்முரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் திருச்செந்தூரில் 'அரசியல் சுனாமி'க்கு வாய்ப்பிருக்கிறதாகவே தெரிகிறது..












Click it and Unblock the Notifications