அமல்ராஜ், இந்தா பிடிங்க ரூ. 30 லட்சம் பரிசு... டேபிள் டென்னிஸ் வீரருக்கு ஜெ. கடிதம்
சென்னை: காமன்வெல்த் போட்டியில், ஆட்வர் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் அமல்ராஜுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு ரூ. 30 லட்சம் பரிசையும் அவர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஒரு வாழ்த்துக் கடிதத்தை அமல்ராஜுக்கு அனுப்பியுள்ளார். அதில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியல், ஆடவர் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில், வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் நாட்டுக்கும், தமிழகத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளீர்கள். இதற்காக உங்களை தமிழக மக்களின் சார்பில் இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
இது உங்களுக்கு காமன்வெல்த் போட்டியில் 2வது பதக்கமாகும். இதற்கு முன்பு 2010 காமன்வெல்த் போட்டியில், வெண்கலப் பக்கம் வென்றுள்ளீர்கள்.
காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றால் வழங்கப்படும் பரிசுத் தொகையை ரூ. 30 லட்சமாக உயர்த்தி நான் 2011ம் ஆண்டு அறிவித்திருந்தேன் என்பதை அறிவீர்கள். அந்தப் பரிசுத் தொகைக்கு தற்போது தாங்கள் தகுதி பெற்றுள்ளீர்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி வாழ்த்தியுள்ளார் ஜெயலலிதா.
சரத் கமலுடன் இணைந்து இந்த வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார் அமல்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
சரத்கமலுக்கும் ஜெ. வாழ்த்து
இதேபோல அமல்ராஜுடன் இணைந்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிய அசந்தா சரத் கமலுக்கும் முதல்வர் ஜெயலலிதா வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளார். இது கமலுக்கு 6வது காமன்வெல்த் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.