தாலிக்கு ஒரு சவரன் தங்கம்.... மொபெட் வாங்க 50% மானியம்: ஜெ. அறிவிப்பு
ஈரோடு: தாலிக்கு 4 கிராம் தங்கம் வழங்கப்படும் திட்டம் ஒரு சவரனாக உயர்த்தி வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் பெண்களை கவரும் மகத்தான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா. அதேபோல மகளிருக்கு இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு 50 சதவிகிதம் மானியம் அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 தினங்களே உள்ள நிலையில் ஆளும் கட்சியான அதிமுக இதுவரை தேர்தல் அறிக்கை வெளியிட காலம் தாழ்த்தியது.

திமுக, பாமக, மக்கள் நலக்கூட்டணி, பாஜக, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வந்த நிலையில், ஜெயலலிதா அமைதி காத்து வந்தார்.
அமாவாசை நாளில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஈரோட்டில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஜெயலலிதா. விவசாயிகள், மாணவர்கள், பெண்களை கவரும் பல்வேறு நலத்திட்டங்களை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா.
தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கைப்பேசி விலையின்றி வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார்.
பெண்கள் இருசக்கர வாகனம், மொபெட் வாங்குவதற்கு 50 சதவிகிதம் மானியம் வழங்கப்படும் என்று கூறினார்.
இதேபோல திருமண நிதி உதவி திட்டங்களின் கீழ் 10-ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு ரூ. 25 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. பட்டம் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 4 கிராம் தங்கம் இனி ஒரு சவரனாக (8 கிராம்) உயர்த்தி வழங்கப்படும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications