ஜெயலலிதாவின் விழுப்புரம் பிரச்சார தேதி மாற்றம்.. ஆனால், அதே வெயில் நேரத்தில் தானா?
சென்னை: ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது. விழுப்புரத்தில் மே 3ம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 29ம் தேதியே ஜெயலலிதா பிரச்சாரம் செய்ய உள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது. கொளுத்தும் வெயிலில் பிரச்சாரம் செய்த ஜெயலலிதாவின் பேச்சை கேட்க வந்த தொண்டர்கள் 4 பேர் உயிரிழந்த நிலையிலும் நேரத்தை மாற்றுவது பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
தமிழகத்தில் மே 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அதிமுக 227 இடங்களிலும், கூட்டணி கட்சிகள் 7 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இதற்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டது.

அவ்வப்போது வேட்பாளர்கள் அவ்வப்போது மாற்றப்பட்டாலும் சென்னை தொடங்கி, விருத்தாச்சலம், தருமபுரி, அருப்புக்கோட்டை, காஞ்சிபுரம், சேலம் என பல மாவட்டங்களில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து ஜெயலலிதா பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் மே 3ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறுவதாக இருந்த ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 29ம் தேதிக்கு மாற்றி அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே நெல்லை, வேலூர் பிரச்சார தேதிகள் மாறிய நிலையில் விழுப்புரத்தில் நடைபெறும் பிரச்சார தேதியும் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் எந்த நேரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்படவில்லை.
சென்னை, காஞ்சியில் மாலை நேரத்தில் பிரச்சாரம் செய்தார் ஜெயலலிதா, அதே நேரத்தில் விருதாச்சலம், தருமபுரி, அருப்புக்கோட்டை, சேலத்தில் கொளுத்தும் வெயிலில் பிரச்சாரம் செய்த ஜெயலலிதாவின் பேச்சை கேட்க வந்த தொண்டர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் தமிழகம் முழுவதும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர், எனினும் பிரச்சார நேரத்தை மாற்றுவது பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications