நக்சல் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்கள் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் நிதி... ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: நக்சலைட் தாக்குதலில் வீர மரணம் அடைந்த எல்லைப் பாதுகாப்புப் படை தலைமைக் காவலர் ரவிச்சந்திரன் மற்றும் காவலர் அபிலாஷ் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...
26.8.2015 அன்று ஒடிஸா மாநிலம், மல்கான்கிரி மாவட்டம், சிந்தாதுளி கிராமத்தில் நக்சல் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக ஈடுபட்டிருந்த கிருஷ்ணகிரி மாவட்டம், திம்மநத்தம் கிராமத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை தலைமைக் காவலர் ரவிச்சந்திரன், கன்னியாகுமரி மாவட்டம், அருமனை கிராமத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை காவலர் அபிலாஷ் ஆகிய இருவரும் நக்சலைட்டுகளின் திட்டமிட்ட வெடிகுண்டு தாக்குதலில் மரணம் அடைந்தார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
நக்சலைட்டுகள் தாக்குதலில் வீர மரணம் எய்திய எல்லைப் பாதுகாப்பு படை தலைமைக் காவலர் ரவிச்சந்திரன் மற்றும் காவலர் அபிலாஷ் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நக்சலைட்டுகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த எல்லைப் பாதுகாப்புப் படை தலைமைக் காவலர் ரவிச்சந்திரன் மற்றும் காவலர் அபிலாஷ் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.