நிறைகுடத்துடன் வாசலில் பெண், பூரண கும்பம், திருஷ்டி பூசணிக்காய்: ஜெ. பிரச்சார சகுனங்கள்!
சென்னை: வெளியே கிளம்பும் போது நிறைகுடம் எதிரில் வந்தால் நல்ல சகுனம் என்பார்கள்...
தேர்தல் பிரச்சாரம் செய்ய முதல்வர் ஜெயலலிதா ஒவ்வொருமுறையும் வெளியே கிளம்பும் போதும் நிறைகுடத்தை தரிசித்து விட்டுதான் போகிறாராம்.
பிரதமர் ஆகி டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்ற வேண்டும் என்று என்ற கனவோடு 40 தொகுதியையும் கைப்பற்ற நினைக்கும் ஜெயலலிதா ஆரம்பம் முதலே,ஜோதிடம், வாஸ்து ஆகிய வரிசைப்படி காய் நகர்த்துவதை கட்டுரைகளை கூறியிருக்கிறோம்.
இதோ சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு ஹெலிகாப்டரில் பிரச்சாரம் செய்யும் ஜெயலலிதாவின் தினசரி நிகழ்வுகளை படியுங்களேன்.
காஞ்சியில் தொடக்கம்:
ஜெயலலிதா தனது பிரச்சாரப் பயணத்தை திரிதியை நாளில் கோவில் நகரமான காஞ்சியில் தொடங்கினார். வடக்கு பார்த்த மேடைதான் இதில் முக்கிய அம்சம். ஏனெனில் டெல்லி வடக்கே தானே இருக்கிறது.
சகுனம் சரியா இருக்கா?
ஜெயலலிதா வெளியே கிளம்பும்போது நிறைகுடத் தண்ணீருடன் ஒரு பெண், போயஸ் கார்டனின் போர்ட்டிகோவில் நிற்கிறார். தண்ணீர்க் குடம் தாங்கிய பெண்ணைப் பார்த்தபடி காரை நோக்கி வருகிறார்.
திருஷ்டிப் பூசணிக்காய்
வாசலில் திருஷ்டிப் பூசணிக்காய் சுற்றுகிறார்கள். அதனையும் ஏற்றுக்கொண்டு கார் ஏறி உட்காருகிறார். ஒவ்வொரு முறையும் பிரசாரம் கிளம்பும்போதும், இந்தச் சம்பிரதாயம் அப்படியே கடைப்பிடிக்கப்படுகிறது.
பூரண கும்ப மரியாதை
ஹெலிகாப்டரில் இருந்து கீழே இறங்கியதும் பூரண கும்ப மரியாதை செய்கிறார்கள். அதை ஏற்றுக்கொண்டு மேடைக்கு வந்து மைக் முன் அவர் நின்று பேச ஆரம்பிக்கிறார். கூட்டம் நடக்கும் இடத்துக்கு மிக அருகிலேயே ஹெலிபேட் இருப்பதால், இறங்கியதும் கார் ஏறி மேடைக்கு வந்து பேச ஆரம்பித்துவிடுகிறார்.
கடுமையும் கர்ஜனையும்
மேடையில் ஜெயலலிதா உட்காருவது இல்லை. அவருக்கு முன்னால் யாரும் பேசுவதும் இல்லை. வந்ததும் அவரே தொடங்கி பேசுகிறார். மைக் முன் நின்ற உடன் முகத்தில் கடுமை தானாகவே வந்து ஒட்டிக்கொள்கிறது. காங்கிரஸையும் திமுகவையும் தாக்கு தாக்கு என தாக்குகிறார்.
மாலை சால்வைக்கு தடா
மேடையில் யாரும் அவருக்கு மாலையோ, சால்வையோ அணிவிக்கக் கூடாது. பொதுவாக, கோயில் பிரசாதங்களைப் பெற்றுக்கொள்வார். ஆனால், அதைத் தரவும் யாருக்கும் அனுமதி இல்லை.
மீண்டும் பூசணிக்காய்..
கூட்டம் முடிந்ததும் காரில் ஏறி, ஹெலிகாப்டரில் ஏறி, சென்னை வந்து போயஸ் கார்டனை அடைந்ததும் மீண்டும் பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழிக்கிறார்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் அவர் ஹெலிகாப்டரில் பிரச்சாரம் செய்யச் செல்லும்போதெல்லாம் இந்த நிகழ்வுகள் ரிப்பீட்....