ஜெ.வின் மதுரை பிரச்சார கூட்டத்தில் மயங்கிய தொண்டர் மரணம்- பலி 6 ஆக உயர்வு
மதுரை: மதுரையில் நடந்த ஜெயலலிதாவின் பிரசாரக் கூட்டத்தில் மயங்கிய அதிமுக தொண்டர் சிகிச்சை பலனின்றி 12 நாட்களுக்குப் பின்னர் நேற்று உயிரிழந்தார். இதனால் ஜெயலலிதா பிரசார கூட்டத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
சட்டசபை தேர்தலையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த ஏப்ரல் 9ம் தேதி முதல் பிரசாரம் செய்து வருகிறார். இந்த பிரசார கூட்டங்கள் கொதிக்கும் வெயிலில் நடைபெற்றன. வெயில் கொடுமையால் ஆட்கள் வர அஞ்சியதால், ரூ.500 முதல் ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து அழைத்து வருகின்றனர்.

கூட்டம் நடந்த வெட்டவெளி மைதானத்தில் பல மணிநேரம் அடைத்து வைத்தனர். குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் மயங்கினர். விருத்தாசலத்தில் 2 பேர், சேலத்தில் 2 பேர், அருப்புக்கோட்டையில் ஒருவர் என மொத்தம் 5 பேர் ஏற்கனவே பலியானார்கள்.
இதை தொடர்ந்து உச்சி வெயிலில் கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இதன் பிறகும் ஜெயலலிதா பிரசாரத்திற்காக கொதிக்கும் வெயிலில் அடைத்து வைப்பதை நிறுத்தவில்லை. மாலையில் கூட்டம் நடத்தினாலும் பிற்பகலே தொண்டர்களை அடைத்து வைப்பது தொடர்கதையாகி வருகிறது.
கடந்த ஏப்ரல் 27ம் தேதி மதுரை ரிங்ரோட்டில் ஜெயலலிதா பொதுக்கூட்டம் நடைபெற்றது. 5.30 மணிக்குதான் ஜெயலலிதா பிரச்சாரம் செய்வார் என்று அறிவித்தும், பிற்பகல் 2 மணி முதல் கொளுத்தும் வெயிலில் அழைத்து வரப்பட்ட தொண்டர்கள் அடைத்து வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை. வெயில் கொடுமையாலும் தண்ணீரின்றியும் தவித்தனர்.
இந்த பொதுக்கூட்டத்தில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரளிக்கோட்டையை சேர்ந்த காத்தமுத்து, 43 உள்பட 6 பேர் வெயில் கொடுமையால் மயங்கி விழுந்தனர். அனைவரும் மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் காத்தமுத்து மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
12 நாட்கள் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிய காத்தமுத்து, நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இவரையும் சேர்த்து ஜெயலலிதா பிரசாரத்தில் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications