ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆனதும் பார்க்கப்போகும் முதல் வேலை இதுவாகத்தான் இருக்கும்!
சென்னை: ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆனதும் முதலில் அவர் 'கவனிக்க' வேண்டியது சசிகலா புஷ்பா மற்றும் சசிகலா நடராஜன் நடுவேயான மோதலைத்தான் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.
ஜெயலலிதா தன்னை அடித்தார் என ராஜ்யசபாவிலேயே கூறி பரபரப்பை கிளப்பியவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்.பி, சசிகலா புஷ்பா.
ஆனால், ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டது முதல் அவரது இலக்கு சசிகலா நடராஜனாக மாறிப்போயிருந்தது.
பரபரப்பு பேட்டிகள்
ஜெயலலிதாவை நெருங்கி செல்ல யாருக்கும் அனுமதி தராமல் சசிகலா நடராஜன் குறுக்கே நிற்பதாக குற்றம்சாட்டிய புஷ்பா, ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்து ஜெயலலிதா எங்கே உள்ளார் என்பதை அறியவும் தயங்க மாட்டேன் என எச்சரிக்கைவிடுத்தார்.
புஷ்பா ஒரு தொடர்கதை
புஷ்பாவின் பேட்டிகள், மெகா சீரியல் போல தொடர்ந்தன. பேட்டிகள் கொடுத்த இடத்தை டெல்லியாக தேர்ந்தெடுத்துக் கொண்டு புத்திசாலித்தனத்தை காண்பித்தார் புஷ்பா. அடுத்தடுத்த பேட்டிகளில் சசிகலா நடராஜனை வறுத்தெடுத்தார் அவர். ஜெயலலிதாவை மறைத்து வைத்திருப்பதை பார்த்து அதிமுக தொண்டர்கள் பொங்கி எழுவார்கள், அப்பல்லோவை முற்றுகையிடுவார்கள் என்றெல்லாம் உணர்ச்சிகரமாக பேசியிருந்தார் அவர்.
திடீர் புகார்கள்
இதனிடையே சசிகலா புஷ்பா மீது உள்ளூர் காவல் நிலையங்களில் திடீரென முளைத்த புகார்களுக்கு கீ கொடுத்து வேகமூட்டப்பட்டது. ஆனால், "சில்வண்டு சிக்கும்.. சிறுத்தை சிக்காதுலே.." என்ற சினிமா டயலாக்கிற்கு ஏற்ப, எல்லாவற்றையும் சமாளித்து டெல்லியில் முகாமிட்டார் புஷ்பா.
எதிரும், புதிரும்
இப்போது இரு சசிகலாக்களுமே எதிரும் புதிருமாக இருக்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் யாரை வேண்டுமானாலும் யாரும் காலை வாரி விடலாம். இந்த சூழ்நிலையில் ஜெயலலிதா மீண்டும் ஆக்டிவாகிவிட்டால் புஷ்பா பாடு திண்டாட்டம்தான். "மருத்துவமனையில் தன்னை உடனிருந்து கவனித்த சசிகலா நடராஜனுக்கு இந்த நன்றிக்கடனை கூடவா செய்ய மாட்டார் ஜெயலலிதா" என்று கண் சிமிட்டுகிறார்கள் எதிர்க்கட்சி புள்ளிகள் சிலர். ஜெயலலிதா தற்போது, ஐசியூவிலிருந்து வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவது உறுதியாகிவிட்டது. ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆனதுமே, அவரது முதல் அஜெண்டா, புஷ்பாவை அடக்கி வைப்பதாகத்தான் இருக்கும் என்கிறார்கள் ர.ரக்கள்.