ஆட்டுக் கறிக்கு அடிதடி- ஜெ பேரவை செயலாளருக்கு அரிவாள் வெட்டு
நீலகிரி: நீலகிரியில் ஆட்டுக் கிடாயின் கறியை கூறு போடுவதில் ஏற்பட்ட தகராறில் ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் ஒருவர் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே அமைந்துள்ள சக்கத்தா என்ற ஊரிலுள்ள கோவிலில் கிடா வெட்டி, பலி கொடுக்கும் பூஜை நடந்துள்ளது. அதில், சாமிக்கு படைத்தது போக மீதமுள்ள கறியை கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் கூறு போட்டு பங்கிட்டுக்கொள்வது வழக்கம்.
இந்நிலையில் சக்கத்தா கிராமத்தை சேர்ந்த கோத்தகிரி ஒன்றிய ஜெ பேரவை செயலாளரான சுரேஷ் என்பவர் ஆண் வாரிசு இல்லாத தனது சகோதரி வீட்டுக்கு ஒரு கூறு கறி வழங்குமாறு கேட்டுள்ளார். இது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கும், சுரேசுக்குமிடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது.
வாய்த்தகராறு முற்றிய நிலையில், முருகன் தன்னிடம் இருந்த வெட்டுக் கத்தியால் சுரேஷை வெட்டியுள்ளார். இதனால், மார்பில் காயமடைந்த சுரேஷ், கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சுரேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.