5 முறை முதல்வர்.. கருணாநிதி சாதனையை சமன் செய்யப் போகும் ஜெயலலிதா!
சென்னை: ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றால், அது கருணாநிதியின் சாதனையை சமன் செய்துவிடும்.
திமுக தலைவர் கருணாநிதி, ஐந்து முறை தமிழக முதல்வராக பதவி வகித்துள்ளார். 1969-ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006-ல் ஐந்தாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
ஆனால், ஜெயலலிதா முதல் முறையாக முதல்வராக பதவிக்கு வந்தது 1991ம் ஆண்டுதான். ஆனால், இன்னும் சில தினங்களில், கருணாநிதிக்கு ஈடாக ஐந்தாவது முறையாக ஜெயலலிதா முதல்வராக உள்ளார்.
முதல் முறை
ஆம்.. 1991 முதல் 1996வரை ஜெயலலிதா முதல்வராக பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில்தான், அவர் வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், 1996 பொதுத்தேர்தலில் அதிமுக மிகப்பெரும் தோல்வியை சந்தித்தது.
2வது முறை குழப்பம்
இருப்பினும் 2001 பொதுத் தேர்தலில் மக்கள் மீண்டும் அதிமுகவையே ஆட்சிக்கு கொண்டு வந்தனர். அப்போது 2வது முறையாக ஜெயலலிதா முதல்வரானார். ஆனால், ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடாமலேயே, தன் மீதான வழக்குகள் நிலுவையில் இருந்தபோதே, நான்கு தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் செய்து அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் முதல்வராக பதவியேற்றார்.
3வது முறையாக பதவிக்கு வந்தார்
பின்னர் அதை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதனால் அவர் ராஜினாமா செய்தார். அப்போது அவர் எந்தத் தொகுதியிலும் உறுப்பினராக இல்லை. 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெயலலிதா பதவி விலகினார். பன்னீர்செல்வம் முதல்வரானார். அடுத்து 2002ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அவர் மீண்டும் போட்டியிட தடை நீங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் பதவி விலகினார். ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட்டு வென்று 3வது முறையாக முதல்வராக அமர்ந்தார்.
நான்கு முடிந்து ஐந்து
இந்நிலையில், 2011ல் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவிக்கு வந்தார். இது நான்காவது முறை. ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதியே, அவரது முதல்வர் பதவியும் பறிபோனது. இந்நிலையில், ஹைகோர்ட்டில் தண்டனை ரத்தாகியுள்ள நிலையில், மீண்டும் ஜெயலலிதா சில நாட்களில் முதல்வராக உள்ளார். அப்படி முதல்வரானால், அது ஐந்தாவது முறையாகும். அந்த வகையில், தமிழகத்தில் அதிகமுறை முதல்வராக பதவியேற்றவர் என்ற சாதனையை, கருணாநிதியுடன், ஜெயலலிதா பகிர்ந்து கொள்ள உள்ளார்.